சாதி, மத இறுதி சடங்கு கூடாது.. பெரியார் உரையை போடுங்க! தந்தையின் மரண சாசனம் - நிறைவேற்றிய பிள்ளைகள்
விருதுநகர்: தனது இறுதி சடங்கு மற்றும் ஊர்வலத்தில் எந்த சாதி, மத சடங்குகளையும் செய்யக்கூடாது என்ற தந்தையின் மரண சாசனத்தின்படி அவரது பிள்ளைகள் அதை செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் தெ.சுந்தரமகாலிங்கம். ஓய்வுபெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமான இவர் கம்யூனிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். அதன் அடிப்படையில் சாதி, மத நம்பிக்கைகளை கடைபிடிக்காமல் வாழ்ந்து வந்தார்.
பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள இவர், இலக்கிய கூட்டங்களிலும் உரையாற்றி வந்தார். பல நாளிதழ்கள், வார இதழ்களுக்கு கட்டுரை எழுதி வந்தார். 82 வயதான இவர் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அப்போது அவரது குடும்பத்தினருக்கு சுந்தரமகாலிங்கம் எழுதிய மரண சாசனம் கிடைத்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் ஆண்டு அந்த மரண சாசனத்தை எழுதி இருக்கிறார் சுந்தரமகாலிங்கம்.
500 அநாதை சடலங்களுக்கு இறுதிச் சடங்கு.. 72 வயதில் ஊருக்கு உழைக்கும் புதுக்கோட்டை மருத்துவர்
உடல் தானம்
அதில், "மனித வாழ்வில் மரணம் நிச்சயம் என்னும் கருத்துடன் என் சுய நினைவுடன் எழுதி வைக்கும் மரண சாசனம்" தொடங்கி இருக்கும் அவர், 10 விருப்பங்களை தனது குடும்பத்தினரிடம் வைத்து இருந்தார். உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் கண்களை தானம் செய்ய வேண்டும், உடலை மதுரை மருத்துவக் கல்லூரி மெய்யியல் கழக ஆய்வு ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.
சாதி, மத சடங்கு கூடாது
உடலை விட்டு உயிர் பிரிந்ததும் சாதி, மத குறிகளை இடக்கூடாது என்றும், சாதி, மத சடங்குகளை செய்யக்கூடாது எனவும் அவர் அதில் எழுதியுள்ளார். நீர் பானை எடுக்கக்கூடாது, மகன்கள், பேரன்களுக்கு மொட்டை போடக்கூடாதும் என்றும், சடலத்தை ஊர்வலமாக எடுத்துச்செல்லும்போது மேளம், தாளம், ஆட்டம், பாட்டம் இருக்கக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பெரியார் உரை
இறுதி ஊர்வலத்தின்போது பெரியாரின் உரையை ஒலிபரப்பிக் கொண்டு செல்லலாம் என்றும், சடலத்தை எரிக்கும் முன் மத சடங்குகளை செய்வது, எரித்த மறுநாள் சுடுகாட்டுக்கு சென்று எந்த சடங்கும் செய்திடக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டிருக்கும் சுந்தரமகாலிங்கம், அனைத்து இயக்கத் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார்.
மகனின் பேஸ்புக் பதிவு
இந்த நிலையில் அவர் விருப்பப்படியே உடல் தானம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது மகன், கவுதமன் முகநூல் அதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், "அப்பாவின் விருப்பப்படியே எந்தவொரு இறுதிச்சடங்கும் இல்லாமல் அப்பாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக, அப்பாவின் கண்கள் தானம் வழங்கப்பட்டன. வீட்டின் முன்பாக த.மு.எ.க.ச., சர்வ கட்சித் தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள் சூழ இரங்கல் கூட்டம் நடந்தது.
உடல் தானம்
அதன்பின்னர் அனைவரும் உணர்வுப்பெருக்குடன் சூழ, தோழர்களின் முழக்கத்துடன் அப்பாவின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு, மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று உடல் தானத்திற்கு வழங்கினோம். இதுவரை, எருவால் முகத்தை மூடிக் கொள்ளி வைத்துப் பார்த்திருக்கிறேன்... மின் மயானத்தினுள் உடலை ட்ராலியில் வைத்து உள்ளனுப்பிப் பார்த்திருக்கிறேன். இன்று முதன்முறையாக, உடலை மார்ச்சுவரி ஃப்ரீசர் பாக்ஸினுள் தள்ளி மூடுவதைப் பார்த்தேன்.
மருத்துவர் பாராட்டு
இன்று அரசு மருத்துவமனையில் இளம் மருத்துவர் ஒருவர், அப்பாவின் உடலை தானம் செய்ய வந்ததை வியப்போடு பேசினார். இது அப்பாவின் விருப்பம் என்றதும், "அப்பா கம்யூனிஸ்ட்டா?" என்று கேட்டார். "ஆம்" என்றேன். "பொதுவா ஆவி, ஆன்மான்னு எரியூட்டவும், புதைக்கவும் தான் செய்வாங்க... மண்ணுக்குக் கொடுக்கும் உடலை, மண்டைக்கு(அறிவு வளர்ச்சிக்கு) கொடுக்கணும்னு நினைச்சிருக்காங்களே..." என வியந்தார்.
உணர்ச்சிகரம்
வியப்பான விஷயங்களை அப்பாவோடு பகிர்ந்து பழகியதில், இதைக்கூட அப்பாவோடு பகிரத் தோன்றியது. இன்றைய ஒவ்வொரு கணத்திலும் அப்பா எனக்கு 'இப்படிச் செய்... அப்படிச் செய்' என்று அறிவுறுத்துவதாகவும், அவ்வப்போது பாராட்டுவதாகவுமே பட்டது. இப்போதுகூட, அப்பா விருப்பப்பட்டபடி செய்து முடித்ததைப் பாராட்டுவதாக உணர்கிறேன்... ஆம், இனி என்றென்றும் அப்பாவின் நினைவுகள் தொடர்ந்தபடி..." என்று பதிவிட்டுள்ளார் உணர்ச்சிகளுடன்.