மும்பை ஐஐடி டூ ட்விட்டர் சிஇஓ.. ட்விட்டரின் புதிய சி.இ.ஓ ஆகும் இந்தியரான பராக் அகர்வால்.. யார் இவர்
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருந்த ஜாக் டோர்சி பதவி விலகியுள்ள நிலையில், புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அக்ரவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
சர்வதேச அளவில் முக்கிய டெக் நிறுவனங்களில் ஒன்று ட்விட்டர். 140 எழுத்துகளில் அனைத்து கருத்துகளைக் கூறிவிட வேண்டும் என்ற ட்விட்டரின் கான்செப்ட் உலக அளவில் செம ஹிட் அடித்தது.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்தின் நிலை சுமுகமாக இல்லை. பல்வேறு நாடுகளும் ட்விட்டர் உள்ளிட்ட பல டெக் நிறுவனங்களுக்கு எதிராக முஷ்டியை முறுக்க தொடங்கியுள்ளன.

முதலீட்டாளர்கள் அதிருப்தி
கடந்த சில ஆண்டுகளாகவே ட்விட்டர் நிறுவனத்திற்கு டிக்டோக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற நிறுவனங்கள் கடும் போட்டி கொடுத்து வந்தது. இந்தச் சூழலில் ட்விட்டர் சிஇஓ ஆக இருந்த ஜாக் டோர்சியின் செயல்பாடுகள் முதலீட்டாளர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்திற்கு போதிய நேரம் செலவழிக்காமல் டோர்சி கிரிப்டோகரன்ஸிகளில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக முதலீட்டாளர்கள் குற்றஞ்சாட்டினர்,

ஜாக் டோர்சி ராஜினாமா
மேலும், ஜாக் டோர்சி சிஇஓ பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர். இதனால் டோர்சி தனது பதவியை ராஜினாமா செய்யலாம் எனக் கடந்த ஆண்டு டிசம்பர் முதலே தகவல்கள் வெளியானது. இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்வதாக ஜாக் டோர்சி அறிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனம் அதன் நிறுவனர்களிடம் இருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல தயாராக உள்ளது என்று நான் நம்புவதாலேயே பதவியை ராஜினாமா செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

புதிய சிஇஓ
அவருக்குப் பதிலாக இந்தியரான பராக் அக்ரவால் ட்விட்டரின் புதிய சிஇஓ ஆகப் பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியரான பராக் அக்ரவால் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உள்ளார். அதேபோல விரைவில் ட்விட்டர் போர்ட் உறுப்பினராகவும் பராக் அக்ரவால் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.

ஒருமனதாக தேர்வு
புதிய சிஇஓ ஆக யாரை நியமிப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அதில் பராக் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாகவும் டோர்சி தெரிவித்துள்ளார். மேலும் பராக் அக்ரவால் குறித்து டோர்சி தனது ட்விட்டரில், "அவர் ட்விட்டரின் தேவைகளையும் ஆழமாகப் புரிந்து வைத்துள்ளார். அவர் (பராக்) தான் எனது தேர்வாக இருந்தார். இந்த நிறுவனத்தை நல்ல பாதைக்கு அழைத்து வரும் ஒவ்வொரு முடிவிற்குப் பின்னாலும் பராக் இருந்துள்ளார்.

நம்பிக்கை உள்ளது
தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்க அவர் தகுதியான நபர் என நாம் முழுவதுமாக நம்புகிறேன். ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பராக் மீது எனக்கு ஆழமான நம்பிக்கை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அவரது பணி மிகச் சிறப்பாக இருந்துள்ளது. இந்த நிறுவனத்தை இப்போது அவர் வழிநடத்தும் நேரம் வந்துவிட்டது" எனப் பதிவிட்டுள்ளார். டோர்சியின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ள பராக் அக்ரவால், அவர் தனது ட்விட்டரில், "முன்பை காட்டிலும் உலகம் இப்போது நம்மைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய செய்தி குறித்து பலருக்கும் பல விதமான கருத்து இருக்கும் என எனக்குத் தெரியும்" என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

யார் இந்த பராக் அக்ரவால்
இந்தியாரான பராக் அக்ரவால் கடந்த 2011ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் முதலில் சேர்ந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு அவர், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) பதவி உயர்வு பெற்றார். ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக, பராக் அக்ரவாலுக்கு ட்விட்டர் தளத்தின் தொழில்நுட்ப உத்தி, இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு, பயனாளிகள், வருவாய் மற்றும் அறிவியல் குழுக்களை வழிநடத்தும் பொறுப்பு இருந்தது.

மும்பை ஐஐடி மாணவர்
இந்தியரான சேர்ந்த பராக் அக்ரவால் மும்பை ஐஐடியில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் பொறியியல் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தில் சேரும் முன் பராக் அக்ரவால் மைக்ரோசாஃப்ட் ரிசர்ச், யாகூ நிறுவனங்களிலும் முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

முதல் முறை இல்லை
அமெரிக்க டெக் நிறுவனம் ஒன்றுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தலைவராக நியமிக்கப்படுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, கூகுளின் தாய் ஆல்பாபெட் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சத்யா நாதெல்லா, ஐபிஎம் நிறுவனத்தில் அரவிந்த் கிருஷ்ணா, அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாராயணன் ஆகிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications