டெல்டா வைரசையும் அடித்து நொறுக்கும் கோவாக்சின் தடுப்பூசி.. அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் தகவல்
வாஷிங்டன்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் உருவாக்கிய இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி, கொரோனா வைரஸின் ஆல்பா மற்றும் டெல்டா வகைகளை திறம்பட கையாளுகிறது என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவாக்சின் செலுத்தப்பட்டவர்களின் ரத்தத்தை வைத்து நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளின் முடிவுகள், இந்த தடுப்பூசி ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது என்று NIH கூறியுள்ளது.

SARS-CoV-2 இன் B.1.1.7 (ஆல்பா) மற்றும் B.1.617 (டெல்டா) வகைகளை திறம்பட கோவாக்சின் கையாளுகிறது. இந்த வகை வைரஸ்கள் முறையே, இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டது. எனவே இந்த ஆய்வை மேற்கொண்டோம் என்று தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை இரண்டரை கோடி மக்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவாக்சின், வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்க நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. தடுப்பூசியின் 2 ஆம் கட்ட ஆய்வில் வெளியிடப்பட்ட முடிவுகள் இது பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவுகள் குறைவானது என்று என்ஐஎச் தெரிவித்துள்ளது. கோவாக்சின் 3 ஆம் கட்ட ஆய்வு டேட்டா இந்த ஆண்டின் பிற்பகுதியில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 3வது டேட்டா பொது வெளிக்கு வரவில்லை என்பதால்தான், உலக சுகாதார நிறுவனம் போன்ற பன்னாட்டு அமைப்புகள் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி தரவில்லை. இந்தியாவில் இந்த தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாக புகார்கள் இல்லை என்ற போதிலும் 3வது கட்ட டேட்டா முக்கியமானது என்பதால் அது எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications