Flashback 2021: அமெரிக்க வரலாற்றில் கறுப்பு நாள்.. டிரம்ப் செய்த செயல்.. பற்றி எரிந்த நாடாளுமன்றம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வின் போது, திடீரென வன்முறையாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அமெரிக்க வரலாற்றில் அழிக்க முடியாத கறுப்பு நாட்களில் ஒன்றாக மாறிவிட்டது.
சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயகம் இருக்கும் உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று இதற்கு முன் வேறு யார் சொல்லியிருந்தாலும், வேறு வேலை இருந்தால் பாருங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்திருப்போம்.
யாரும் நினைத்துக் கூட பார்க்காத இப்படியொரு சம்பவம் தான் அமெரிக்காவில் இந்த ஆண்டு நடந்துள்ளது. 200 ஆண்டுகள் பழைய ஜனநாயகத்தின் நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. நடக்க வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட இந்தச் சம்பவம் நடந்தது எப்படி?
தன்னுடைய மோட்டிவேஷனல் இதுதான்... ரகசியத்தை வெளியிட்ட விஜி
அமெரிக்கா அதிபர் தேர்தல்
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெறுவது வழக்கம். தேர்தல் காலங்களிலும் அரசு சார்ந்த பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக எப்போது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது முதல் எப்போது புதிய அதிபர் பதவியேற்க வேண்டும் என்பது வரை அனைத்தும் பக்காவாக திட்டமிடப்பட்டிருக்கும். அதன்படி நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அங்குத் தேர்தல் நடக்கும். வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அமெரிக்காவின் நடைமுறை
அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடத்தப்பட்டாலும் கூட புதிய அதிபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி தான் பதவியேற்பார், அது வரை பழைய அதிபரே அதிகாரத்தில் தொடருவார். தேர்தல் சார்ந்த பணிகள் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த கால இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த இடைவெளியின் இந்த கலவரம் உருவாக ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் தோல்வியடைந்தார். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு அதிபர் பொறுப்பில் உள்ள ஒருவர் தேர்தலில் தோல்வி அடைவது இதுவே முதல்முறை ஆகும். ஜோ பைடன் பைடன் அமெரிக்காவில் 46ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், தேர்தல் முடிவுகளை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், தேர்தலில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளதாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்து கூறி வந்தார். தேர்தலுக்குப் பிறகு சுமார் 2 மாதங்கள் இதைக் குற்றச்சாட்டை அவர் தொடர்ந்து கூறி வந்தார்.
கருத்து வேறுபாடு
கடந்த சில ஆண்டுகளாகவே பயங்கரமாகப் பிரிந்திருந்த அமெரிக்கச் சமூகத்தில் இது மேலும் கருத்து வேறுபாடுகளை அதிகரித்தது. டிரம்ப் இந்த பொய்யைத் தொடர்ந்து இதையே கூறி வந்ததால், ஆதாரமில்லாத போதிலும் அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் முறைகேடு நடந்ததாக நம்ப தொடங்கினர். இதனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வந்தது.
வன்முறையைத் தூண்டிய டிரம்ப்
இந்தச் சூழலில் தான் கடந்த ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க அதிபரை அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அதற்கு முந்தைய நாள் டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்து கொண்ட டிரம்ப், அதிபர் தேர்தலில் மாபெரும் மோசடி நடந்துள்ளதாகவும் அமெரிக்காவைக் காப்பற்ற பொதுமக்கள் தான் களத்தில் இறங்க வேண்டும் என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார்.
நாடாளுமன்ற கட்டிடத்தில் வன்முறை
டிரம்பின் இந்த பொறுப்பற்ற பேச்சு வன்முறைக்கு வழிவகுத்தது. அதிபர் மற்றும் துணை அதிபரை அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திடீரென அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்ட வன்முறையாளர்கள், உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். இப்படியொரு சம்பவத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. அங்குக் குறைந்த அளவே போலீசார் இருந்ததால் வன்முறையாளர்களைத் தடுக்க முடியவில்லை.
பலர் உயிரிழப்ப
இவ்வளவு பெரிய வன்முறை நடந்து கொண்டிருந்த போதிலும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேசியப் பாதுகாப்புப் படையை அனுப்பத் தயங்கியுள்ளார். இந்தச் சம்பவத்தால் 5 பேர் கொல்லப்பட்டனர், 138 போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர். கடும் அழுத்தத்திற்கு பிறகே தேசியப் பாதுகாப்புப் படை வரவழைக்கப்பட்டு வன்முறையாளர்கள் ஒடுக்கப்பட்டனர். பின்னாட்களில் இது தொடர்பான விசாரணையின்போது, நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டனர். அதில் வன்முறையாளர்கள் அமெரிக்க எம்பிகளுக்கு மிக அருகில் நெருங்கியது தெளிவாகத் தெரிந்தது. இதன் காரணமாக நாடாளுமன்ற கட்டிடத்தில் பல வாரங்களுக்குத் தேசியப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
அமெரிக்க வரலாற்றில் கறுப்பு நாள்
அதிபராக இருக்கும் ஒருவர் எந்தளவுக்குப் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதிபர் பொறுப்புடன் இல்லை என்றால் என்ன மாதிரியான மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை விளக்கும் வகையிலேயே இந்தச் சம்பவம் மாறியது. உலக வல்லரசான அமெரிக்காவில் எந்த ஒரு நாள் சிறப்பான நாட்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டுமோ, அது கறுப்பு நாட்களில் ஒன்றாக மாறிவிட்டது