'ஆக்சிஜன்'.. இந்தியாவுக்கோ அது 'வேதனை'.. அமெரிக்காவுக்கோ அது 'சாதனை'
அமெரிக்கா: 'ஆக்சிஜன்' எனும் ஒற்றை வார்த்தைக்காக இன்று இந்திய தேசமே ஏங்கிக் கொண்டிருக்க, அதை செவ்வாய் கிரகத்தில் உருவாக்கி ஆர்ம்ஸை மடக்கி காட்டுகிறது அமெரிக்கா.
Recommended Video
பூமியைப் போலவே வேற்று கிரகத்திலும் உயிர்கள் வாழ்கின்றனவா? என்ற கேள்விக்கான பதிலை நோக்கி பல்வேறு நாடுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த சோதனையில், கைக்கெட்டும் தூரத்தில் உள்ள 'செவ்வாய்' கிரகம் தான் மனிதனின் டார்கெட்.
அங்கு உயிர்கள் வாழ்கின்றனவா?, வாழ்ந்தனவா?, இனி புதிதாக உயிர்கள் தோன்றி வாழ வாய்ப்புள்ளதா? உள்ளிட்ட ஆயிரமாயிரம் கேள்விகளை மனதில் சுமந்து, அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'பெர்ஸிவியரன்ஸ்' ரோவர் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி செவ்வாயில் தரையிறங்கியது.

உயிர்கள் வாழ வாய்ப்பு
சூரியக் குடும்பத்தில் இத்தனை கோள்கள் இருந்தும், செவ்வாய் கிரகத்தின் மேல் மட்டும் ஏன் இத்தனை ஆர்வக் குவியல்? அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. புதன், மற்றும் வெள்ளி ஆகிய கிரகங்கள் சூரியனுக்கு மிக அருகில் இருக்கின்றன. எனவே, அங்கு உயிர்கள் வாழ சாத்தியமே இல்லை என்பதே விஞ்ஞானிகளின் கூற்று. இதர கோள்கள் அனைத்தும் சூரியனில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், அங்கு குளிர் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவில் இருக்கிறது. எனவே, அங்கும் உயிரினங்களுக்கு நோ சான்ஸ் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆனால், செவ்வாய் கிரகம் தான், சூரியனில் இருந்து உயிர்கள் வாழத் தேவையான தொலைவில் இருக்கிறது. பூமியைப் போலவே அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது. எனவே தான், ஆய்வாளர்களின் 'காதல் தேசமாக' செவ்வாய் இருக்கிறது.

MOXIE செய்த அற்புதம்
இந்த நிலையில், செவ்வாயில் ஒரு மகத்தான விஞ்ஞான புரட்சியை ஏற்படுத்தியது 'பெர்ஸிவியரன்ஸ்' ரோவர். அந்த கிரகத்தின் கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக உருமாற்றி, மனிதன் சுவாசிக்க தேவையான விதையைத் தூவி அதகளப்படுத்தியது. பூமி அல்லாது வேறொரு கிரகத்தில், கார்பன் டை ஆக்சைடு ஆக்சிஜனாக மாற்றப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த 'கன்வெர்ஷன்' பணியை கச்சிதமாக செய்து முடித்தது 'MOXIE' எனப்படும் Mars Oxygen In-Situ Resource Utilization Experiment என்பதாகும்.

90%க்கும் அதிகமான CO2
ஒரு கார் பேட்டரி சைஸ் அளவுள்ள இந்த MOXIE பாக்ஸ், ரோவரின் முன்பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த அலகு, அடிப்படையில் ஒரு தலைகீழ் எரிபொருள் கலமாகும். செவ்வாய் வளிமண்டல வாயுக்கள் இந்த அலகுக்குள் நுழையும் போது, அது 800 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தப்படுகிறது. இந்த அலகின் கேத்தோடு (Cathode) மற்றும் அனோட் (Anode), CO2 இலிருந்து ஆக்ஸிஜனைப் பிரித்து ஆக்ஸிஜனை சேமிக்கிறது. செவ்வாய் கிரகத்தில் 90%க்கும் அதிகமான கார்பன் டை ஆக்ஸைடு உள்ளதை இங்கே நாம் கவனிக்க வேண்டும். இதன் மூலம், மனிதர்கள் வசிப்பதற்கு தேவையான ஆக்சிஜனை அங்கேயே நம்மால் உருவாக்க முடியும். செவ்வாயில் உயிரினங்கள் இருக்கின்றனவோ இல்லையா, நம்மாளுங்களை சாரை சாரையாக அங்கு கொண்டு போய் இறக்கி, பூமி பாரத்தை குறைக்கலாம்.

மனிதனே தீர்மானிக்கட்டும்
ஒருபக்கம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படுபவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் கொடுக்க முடியாமல் இந்தியா எனும் தேசம் அல்லாடிக் கொண்டிருக்க, மறுபக்கம் அமெரிக்காவோ, பூமியில் இருந்து 293 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்கி வரலாறு படைத்துள்ளது. இரு செயல்பாடுகளின் நோக்கம், தேவை ஒன்றுதான்.. ஆக்சிஜன். ஆனால், அதில் எது 'அவசியம்' , 'அத்தியாவசியம்' என்பதே அந்த மனிதனே தீர்மானித்து கொள்ளட்டும்.












Click it and Unblock the Notifications