கம்பீர தோற்றம்.. நமீபியாவில் நிற்கும் இந்தியாவின் 'புலி விமானம்'.. என்ன விஷயம் தெரியுமா?
வாஷிங்டன்: இந்தியாவுக்கு சீட்டாக்களை கொண்டு வருவதற்காக இந்திய விமானம் ஒன்று புலியின் முகத்தோற்றத்துடன் நமீபியா சென்றுள்ளது. புலி முகம் கொண்ட அந்த விமானத்தின் புகைப்படத்தை நமீபியாவில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய விலங்கினமான சீட்டா (சிவிங்கி புலிகள்) இந்தியாவில் ஒரு காலத்தில் அதிக அளவில் இருந்தன.
ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்த மன்னர்கள், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் உள்ளிட்டோர் பொழுதுபோக்குக்காக சீட்டாக்களை வேட்டையாடினர்.
விரைவில் இந்தியாவுக்கு வாங்க.. சவுதி பட்டத்து இளவரசருக்கு பிரதமர் மோடி அழைப்பு கடிதம்
சீட்டாக்களின் எண்ணிக்கை குறைந்தது
இதனால், இந்தியாவில் சீட்டாக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்படாத மாநிலமாக இருந்த சத்தீஷ்கர் மாநிலத்தில் மட்டும் கடந்த 1947-ம் ஆண்டு ஒரு சீட்டா தென்பட்டது. அதன்பிறகு 1952-ல் சீட்டா இந்தியாவில் எங்கும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வரை சீட்டா வகை புலிகள் இந்தியாவின் எந்த பகுதியிலும் இல்லை. எனவே இந்தக் குறையை போக்குவதற்கு திட்டமிட்ட இந்தியா இதற்காக நமீபியாவிடம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
8 சீட்டாக்கள் இந்தியா வருகை
இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவுக்கு 5 ஆண் சீட்டாக்கள் மற்றும் 3 பெண் சீட்டாக்கள் கொண்டு வரப்பட உள்ளன. இதனால், இந்திய மண்ணில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு பிறகு சீட்டாக்கள் கம்பீர நடை போட இருக்கின்றன. மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் இந்த சீட்டாக்கள் விடப்படுகின்றன. இந்தியக் காடுகளில் சீட்டாவை அறிமுகப்படுத்தும் திட்டத்தை வருகிற 17ஆம் தேதி அதாவது பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் அன்று மோடி தொடங்கி வைக்கிறார்.
விமானத்தில் சிங்க முகம்
நமீபியாவில் இருந்து சீட்டாக்களை கொண்டு வருவதற்காக இந்தியாவில் இருந்து பிரத்யேக விமானம் தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவுக்கு சென்றுள்ளது. இந்த நிலையில், சீட்டாக்களை கொண்டு வருவதற்காக இந்தியாவில் இருந்து சென்ற விமானத்தின் முகப்பு பகுதியில் புலி முகம் வரையப்பட்டுள்ளது தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்த புகைப்படத்தை நமீபியாவில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
சீட்டாவை வரவேற்க தயாராக உள்ளோம்
அத்துடன் வெளியிடப்பட்டுள்ள கேப்ஷனில், ''புலிகளின் தேசத்திற்கு நல்லெண்ண தூதர்களை அழைத்து செல்வதற்காக சிறப்பு பறவை துணிச்சல் மிக்க மண்ணை தொட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்விட்டை ரீ-ட்விட் செய்துள்ள மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், ''இந்த நல்லெண்ண தூதர்களை (சீட்டாக்கள்) வரவேற்க இந்தியா உற்சாகத்துடன் தயாராக உள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்பு மறைந்து போன இந்த சீட்டாக்களின் கர்ஜனையை மீண்டும் கேட்பதற்கு ஒட்டு மொத்த தேசமும் ஆவலாக உள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.