சொல்லி அடிக்கும் நாசா... பூமிக்கு திரும்பும் ஓரியன் விண்கலம்! எங்கே விழும்? ஏன் முக்கியம் தெரியுமா
வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசா அனுப்பிய ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் வெற்றிகரமாகத் தனது பயணத்தை முடிக்கும் தறுவாயில் உள்ளது.
நாசா விண்வெளி ஆய்வு மையம் தான் நிலவுக்கு முதலில் மனிதர்களை அனுப்பியது என்பது அனைவருக்கும் தெரியும். நாசா தனது அப்பல்லோ விண்வெளி திட்டம் மூலம் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பியது.
இந்தத் திட்டத்தின் கீழ் அமெரிக்கா பல்வேறு விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி இருந்தது. கடைசியாக 1972ஆம் ஆண்டு அப்பல்லோ ராக்கெட் மூலம் அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பியிருந்தது.
50 ஆண்டு ரெக்கார்ட் காலி.. சாதனை படைத்த ஓரியன் விண்கலம்.. அசத்தும் நாசா! வியக்கும் உலக நாடுகள்
நாசா
அதன் பின்னர், பல ஆண்டுகள் ஆளில்லாத சாட்டிலைட்டை அனுப்பி, நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. இதற்கிடையே இப்போது சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது. இதற்காக நாசா ஆர்டெமிஸ் என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி உள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நாசா கடந்த மாதம் செலுத்தியது. இதில் விண்வெளி வீரர்கள் யாரும் இல்லை. சோதனை அடிப்படையிலேயே அனுப்பப்பட்டது. எரிபொருள் கசிவு, சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பு எனப் பல போராட்டத்திற்கு நடுவே தான் அனுப்பப்பட்டது.
ஓரியன் விண்கலம்
இதில் இருந்த ஓரியன் காப்சியூல், வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. ஓரியன் காப்சியூல் கடந்த சில நாட்களாக நிலவைச் சுற்றி வந்தது. மேலும், நிலவுக்கு மிக அருகில் சென்று முக்கியமான டேட்டாக்களையும் சேகரித்தது. இந்த ஓரியன் விண்கலத்தை நாசா வெற்றியாகவே கருதுகிறது. இது நிலவைச் சுற்றும் போது, அங்கிருந்து பல முக்கிய தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. வரும் காலத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் போது, இந்த டேட்டா பயனுள்ளதாக இருக்கும் என்றும் நாசா குறிப்பிடுகிறது.
மீண்டும் பூமிக்கு திரும்பும் ஓரியன் விண்கலம்
கடந்த நவம்பர் 16ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஓரியன் விண்கலம் நிலவைச் சுற்றி வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (டிச. 1) அது பூமியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. நேற்று டிச.2ஆம் தேதி முதல் நிலவில் இருந்து தொலைவுக்கு வந்துவிட்டது. இதற்கிடையில், நாசா அந்த காப்சியூலில் தொடர்ச்சியாக பல்வேறு சோதனைகளைச் செய்து வருகிறது. இந்தக் கூடுதல் டேட்டாக்களும் கூட தங்கள் வருங்கால மிஷன்களுக்கு உதவும் என்றே நாசா தெரிவிக்கிறது. பூமிக்குத் திரும்பும் இந்த ஓரியன் விண்கலம் வரும் டிச.11ஆம் தேதி கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பம்
ஓரியன் விண்கலம் மீண்டும் பூமிக்குத் திரும்பும் போது எந்தளவுக்கு வெப்பத்தைத் தாங்குகிறது என்பதே முக்கியம். ஏனென்றால் எந்தவொரு பொருளும் பூமி கிட்ட வரும் போது, புவி ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும். அப்போது அது மின்னல் வேகத்தில் பூமியை நோக்கி இழுக்கப்படும். அப்போது காற்றில் ஏற்படும் உராய்வால் தீ பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். பூமியில் நுழையும் விண்வெளி கற்கள் திடீரென எரிந்து சாம்பலாக இதுவே காரணம். விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பும் போது, தீப்பிடித்தால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்..
தொடக்கம் தான்
எனவே, வரும் 11ஆம் தேதி அது கடலில் விழும்போது எந்தளவுக்கு வெப்பத்தைத் தாங்குகிறது என்பது ரொம்பே முக்கியம். அந்த சமயத்தில் மணிக்கு 39,400 கிமீ வேகத்தில் ஓரியன் விண்கலம் பூமியை நோக்கி விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும்பட்சத்தில் அடுத்தாண்டு தொடக்கத்திலேயே ஆர்டெமிஸ்-2 ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்புகிறது நாசா. இவர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள் என்றாலும் கூட சந்திரனை சுற்றி விண்வெளியில் சில நாட்கள் இரு்நதுவிட்டு, மீண்டும் பூமிக்குத் திரும்புவார்கள்.
அடுத்தகட்ட திட்டம்
இதுவும் வெற்றிகரமாக இருந்தால் மட்டுமே வரும் 2025இல் ஆர்டெமிஸ்-3 திட்டத்தின் மூலம் மனிதர்கள் நிலவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதாவது சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் அமெரிக்க வீரர்கள் நிலவில் கால் பதிக்க உள்ளனர். நிலவில் சோதனை செய்வதை நாசா வெறும் தொடக்கமாகவே வைத்துள்ளது. மனிதர்களைச் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பும் முயற்சியில் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது. இதில் கிடைக்கும் டேட்டாக்களை வைத்துக் கொண்டு வரும் 2030ஆம் ஆண்டிற்குள் மனிதர்களைச் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதே நாசாவின் நோக்கம். அதற்கான தொடக்கமே ஆர்டெமிஸ் திட்டமாகும்.