உக்ரைனில் போருக்கு இடையே.. ஆசியர்களுக்கு இனபாகுபாடு.. மாணவர்களை சீண்டும் பாதுகாப்பு படையினர்
வாஷிங்டன்: உக்ரைனில் போர் நடப்பதால் அங்கிருந்து நாடு திரும்பும் ஆப்பிரிக்கா, ஆசிய மாணவர்களிடம் காட்டப்படும் இனபாகுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க செனட்டர், அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதரிடம் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து போர் தொடுத்து வருகிறது. 9வது நாள் ஆனபோதிலும் போர் இன்னும் முடிவடையவில்லை.தொடர்ந்து உக்ரைனில் பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடந்து வருகிறது.
இதற்கிடையே ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போர் முடிவுக்கு வருவதில் சிக்கல் உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

இன பாகுபாடு
இந்தியா உள்பட பிறநாடுகளில் இருந்து அங்கு படிக்க சென்ற மாணவர்களும் தாயகம் திரும்பி வருகின்றனர். ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்நிலையில் தான் உக்ரைனில் இனபாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயிரை காப்பாற்றி கொள்ள உக்ரைனின் மேற்கு எல்லை வரும் ஆப்பரிக்கா, ஆசிய நாடுகளை சேர்ந்த மாணவர்களை எல்லை தாண்ட விடாமல் உக்ரைன் பாதுகாப்பு படை வீரர்கள் பாகுபாடு காட்டி வருகின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ரயில், பஸ்களில்...
இது அமெரிக்க செனட்டர் மார்க் வார்னர் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து அவர் ஐநாவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‛‛உக்ரைனின் மேற்கு எல்லைகளில் மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. இங்குள்ள உக்ரைன் பாதுகாப்பு படையினர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களை பாரபட்சமாக நடத்துகின்றனர். மொராக்கோ, நைஜீரியா, எகிப்து, இந்தியா மாணவர்களை ரயில்கள், பஸ்களில் அனுமதிக்கப்படுவது இல்லை.

நடவடிக்கை என்ன
உக்ரைனில் படிக்கும் 80,000-க்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களில் குறைந்தபட்சம் 20 சதவீதம் பேர் மொராக்கோ, நைஜீரியா உள்ளிட்ட ஆப்பரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்கள் தான். இந்த மாணவர்களும் பாதுகாப்பு வழங்குவது அவசியமாகும். இவர்கள் மட்டுமின்றி அனைத்து நாட்டினரையும் பாரபட்சமாக நடத்துவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனபாகுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆப்பிரிக்க ஒன்றியம், அமெரிக்கா, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்மட்ட சபை ஆகியவற்றின் கோரிக்கையாக இதை நான் பிரதிபலிக்கிறேன்'' என கூறியுள்ளார்.

உறுதி செய்ய வேண்டும்
மேலும், உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, மால்டோவா வழியாகவும் மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். இங்கும் இனம், மதம், மொழி, தேசியத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது . இதை உறுதி செய்ய வேண்டும் என அந்தந்த நாட்டின் தூதர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில்...
முன்னதாக உக்ரைனில் ஆப்பிரிக்கா, ஆசிய மாணவர்களிடம் இன பாகுபாட்டை வெளிப்படுத்துவது தொடர்பாக சர்வதேச தன்னார்வலர்கள், மனித உரிமை வழக்கறிஞர்கள் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications