ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மீது விண்கல் மோதியதா? என்ன நடந்தது? நாசா என்ன சொல்கிறது?
வாஷிங்டன்: பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மீது சிறிய நுண் விண்கல் மோதியதாக தகவல்கள் பரவி வருகிறது. இதற்கு நாசா விஞ்ஞானிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது.
முதல்முறையாக மனிதனை நிலவுக்கு அனுப்பும் அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தை முன்னின்று நடத்தியவர் ஜேம்ஸ் வெப். அவரின் பெயர் தான் இந்த தொலைநோக்கி திட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை எடுத்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.. ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவில் இருந்து 5 ராக்கெட்டுகள் உதவியுடன் இந்த 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 7 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 7 ஆயிரத்து 950 கோடி) செலவிலும், 20 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்கும் பிறகும் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. மிக நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த தொலைநோக்கி படம்பிடித்த பிரபஞ்சத்தின் துவக்க காலங்கள் குறித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
பிரபஞ்சத்தின் தோற்றம்
சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களில் ஒளிரும் பிரபஞ்சத்தின் இந்த புகைப்படம் ஒட்டுமொத்த அறிவியல் உலகத்தை ஆச்சர்ய பட வைத்தது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பியிருக்கும் புகைப்படம் சுமார் 1,300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பிரபஞ்சத்தின் தோற்றம் என்று நாசா விஞ்ஞானிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. அதாவது பெருவெடிப்புக்கு பிறகு நமது பிரபஞ்சம் உருவாகும் போது காணப்பட்ட அதன் தோற்றம் தான் நமக்கு துல்லியமாக கிடைத்து இருப்பதாக விஞ்ஞானிகள் வியப்புடன் தெரிவிக்கின்றனர்
தொலைநோக்கி மீது விண்கல் மோதியதா?
பிரபஞ்சம் குறித்து அறிய விஞ்ஞானிகள் அனுப்பியிருக்கும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மீது கடந்த மே மாதம் சிறிய நுண் விண்கல் மோதியதாகவும், இதில், தொலைநோக்கி கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இன்னும் பல ஆண்டுகள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி செயல்படும் திறன் கொண்டதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த மே மாதம் மோதிய விண்கல் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சிறிய நுண் விண்கல் மோதியதில், தொலைநோக்கியின் முதன்மை கண்ணாடி மெதுவாக செயல்திறனை இழந்து வருவதாகவும், இது சரி செய்ய முடியாத அளவில் உள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் குழு கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எந்த பாதிப்பும் ஏற்படாது
இந்த விண்கல் மோதிய சம்பவம் மே மாதம் 23 முதல் 25-ந் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்துள்ளது. தொலைநோக்கியின் 6.5 மீட்டர் அகல முதன்மை பிரதிபலிப்பானில் உள்ள 18 பெரிலியம்-தங்க தகடுகளில் சி-3 என்று அழைக்கப்படும் ஒரு தகட்டினை இந்த விண்கல் தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொலைநோக்கியின் ஒரு பேனலில் மட்டுமே சேதம் ஏற்பட்டு இருப்பதால், படம் எடுக்கும் திறனில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதும் விஞ்ஞானிகளின் வாதமாக உள்ளது. இருப்பினும், தொலைநோக்கியின் கண்னாடி மற்றும் சூரிய கவசமும் விண்கல் தாக்கத்தால் மெதுவாக சேதம் அடைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும் விரைவில் நாசா இதற்கு விரைவில் அதிகாரபூர்வ விளக்கம் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.