சில வாரங்களில் தலைகீழ் மாற்றம்.. தாலிபான்கள் கைகளுக்கு சென்ற அமெரிக்க ஆயுதங்கள்.. இது எப்படி நடந்தது
வாஷிங்டன்: தாலிபான்களை ஒடுக்க அமெரிக்க அளித்த UH-60 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல அதி நவீன ஆயுதங்கள் இப்போது தாலிபான்கள் கைகளுக்கே சென்றுள்ளதாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
2001ஆம் ஆண்டு தொடங்கிக் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள் ஆப்கனில் தான் இருந்தன. தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்காமல் அமெரிக்கப் படைகள் பார்த்துக் கொண்டன.
கடந்த சில வாரங்களுக்கு முன் ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கின. இதற்காகவே இத்தனை ஆண்டுகள் காத்திருந்த தாலிபான்கள் உடனடியாக ஆப்கன் படைகள் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்கிவிட்டன.

தாலிபான்கள் தாக்குதல்
இது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், தாலிபான்கள் இந்தளவுக்குப் பலமாக இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. வெறும் ஒரு சில வாரங்களில் ஒட்டுமொத்த தேசத்தையே தங்கள் கட்டுப்பாட்டில் தாலிபான்கள் கொண்டு வந்துவிட்டனர். முதலில் எல்லைப் பகுதிகளைக் கைப்பற்றிய தாலிபான்கள், பிறகு ஊரக பகுதிகளையும் அதைத் தொடர்ந்து நகர்ப்புறங்களையும் மின்னல் வேகத்தில் கைப்பற்றினர்.

அமைதி பேச்சுவார்த்தை
அமெரிக்க படைகள் அதிகாரப்பூர்வமாக முழுமையாக வெளியேறும் முன் அஸ்ரப் கானி அரசுக்கும் தாலிபான்களுக்கும் இடையே ஒரு அமைதியை ஏற்படுத்த அமெரிக்க பெரும் முயற்சி எடுத்தது. ஆனாலும், இதற்காக தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை. அஸ்ரப் கானி அரசை அமெரிக்காவின் நீட்சியாகக் கருதிய தாலிபான்கள், 'பவர் ஷேரிங்' முறைக்கும் ஒப்புக்கொள்ளவில்லை.

தாலிபான்கள்
இந்தச் சூழலில் தான் திங்கள்கிழமை ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றினர். இந்தளவு குறைந்த காலத்தில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ் வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. தலைநகர் காபூல் உள்ளிட்ட பல பகுதிகளில் தாலிபான்கள் உள்ளே நுழைந்த போது, ஆப்கன் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஆயுதங்கள்
அதேபோல தாலிபான்கள் ஒடுக்க ஆப்கன் ராணுவத்திற்கு அமெரிக்கா அளித்த நவீன ஆயுதங்களும்கூட இப்போது தாலிபான்களின் கைகளுக்குச் சென்றுள்ளது. UH-60 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அதி நவீன ராணுவ விமானங்களையும் கூட கந்தகர் விமான நிலையத்தில் இருந்து தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்க ஆயுதங்களைத் தாலிபான்கள் பயன்படுத்தும் வீடியோக்களும்கூட இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஒவ்வொரு பகுதியிலும் ஆப்கன் ராணுவத்தை வீழ்த்திய பிறகு, அங்கிருக்கும் அமெரிக்க ஆயுதங்களைத் தாலிபான்கள் கைப்பற்றுகின்றனர். இதன் மூலம் அதிநவீனத் துப்பாக்கிகள், ஸ்னைப்பர்கள், ராணுவ டிராக்குகள் என கிட்டதட்ட ஒரு குட்டி நாட்டிற்கு இருக்கும் ராணுவ உபகரணங்களைத் தாலிபான்களால் கைப்பற்ற முடிந்துள்ளது.

அமெரிக்கா கருத்து
இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், "ஆப்கனில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், நாங்கள் அளித்த ஆயுதங்களில் கணிசமான பங்கு தாலிபான்களின் கைகளுக்குச் சென்றுள்ளது. அதை அவர்கள் திருப்பி எங்களிடம் ஒப்படைப்பார்கள் என்று எங்களுக்கு நம்பிக்கை இல்லை. பல மில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்களைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். 20 ஆண்டுகளாகத் தொடரும் ஒரு போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் இதுபோல சம்பவங்கள் நிகழும் தான்" என்று அவர் குறிப்பிட்டார்.
Recommended Video

இந்தியா நிலைப்பாடு
ஆப்கன் விவகாரத்தில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தாலிபான்களுக்கு ஆதவரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் தாலிபான்களுடன் மோதல் போக்கை வைத்திருந்த ரஷ்யா கூட இணைந்து செயல்படத் தயார் என அறிவித்துள்ளது. அதேநேரம் தாலிபான்களின் ஆட்சியை அங்கீகரிப்பது குறித்து இந்தியா இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. கடந்த காலங்களில் ஆப்கனில் தாலிபான்கள் இருந்த சமயத்தில் தான் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடவடிக்கை அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications