ட்விட்டர் உரிமையாளரின்.. 15 ஆண்டுகள் பழைய ஒற்றை ட்வீட்... அம்மாடியோவ் 7.3 லட்சமா!
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சியின் முதல் ட்வீட் ஏலத்திற்கு வந்துள்ள நிலையில், ஒருவர் 10 ஆயிரம் டாலருக்கு (7.3 லட்ச ரூபாய்) ஏலம் கேட்டுள்ளார்.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் முக்கிய அறிவிப்புகள், போராட்டங்கள் குறித்த தகவல்கள் என அனைத்தும் கிடைப்பது ட்விட்டரில்தான். இன்றைய வாழ்வில் முக்கிய அங்கமாகிவிட்ட ட்விட்டர் தளத்தைக் கடந்த 2006ஆம் ஆண்டு நிறுவியவர் ஜாக் டோர்சி.
ட்விட்டர் சாம்ராஜ்ஜியத்தை 15ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய போது ஜாக் டோர்சி, "just setting up my twttr" என்று பதிவிட்டிருந்தார். இதுதான் ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்ட முதல் ட்வீட்டாக கருதப்படுகிறது. தற்போது ட்விட்டர் தளத்திலேயே அதிகம் லைக் செய்யப்படும், ரீட்வீட் செய்யப்பட்டும் உள்ள இந்த ட்வீட்தான் உள்ளது.
இந்நிலையில், தனது முதல் ட்வீட்டை ஏலம் இடவுள்ளதாக ஜாக் டோர்சி நேற்று அறிவித்தார். 'Valuables by Cent' என்ற நிறுவனம் பிரபலங்களின் ட்வீட்களை ஏலமிட்டு வருகின்றன. ஜாக் டோர்சியின் ட்வீட் ஏலத்திற்குப் பட்டியில் இடப்பட்டவுடன் பலரும் இதை ஏலமெடுக்க முயன்றதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தன.
ஜாக் டோர்சியின் இந்த 15 ஆண்டுகள் பழமையான ட்வீட் சில நிமிடங்களிலேயே 88,888.88 டாலருக்கு ஏலம் கோரப்பட்டது. ட்வீட்களை ஏலமிடும் முறை குறித்து 'Valuables by Cent' கூறுகையில், "ட்வீட்டை வாங்குபவருக்கு கிரிப்டோகிராஃபி மூலம் போடப்பட்ட ஆட்டோகிராப் அடங்கிய டிஜிட்டல் சான்றிதழ் அனுப்பப்படும்.
இதில் உண்மையான ட்வீட்டின் மெட்டா டேட்டாவும் வழங்கப்படும்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்வீட் ஏலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டாலும்கூட ட்விட்டர் தளத்தில் அவை தொடர்ந்து இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, ஜாக் டோர்சியின் முதல் ட்வீட்டை ஒருவர் 10 ஆயிரம் டாலருக்கு (7.3 லட்ச ரூபாய்) ஏலம் கேட்டுள்ளார்.