கியூபா விவகாரத்தில் மட்டும்... டிரம்பை பின்பற்றும் அதிபர் பைடன்.. ஏன் தெரியுமா? விரிவான அலசல்
வாஷிங்டன்: கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையைக் கண்டிக்கும் விதமாக ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்துள்ளது.
கரிபியன் நாடுகளில் ஒன்றான கியூபாவில் மனித உரிமை அத்துமீறல் நடைபெறுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. கியூபாவில் 1959ஆம் ஆண்டு புரட்சியின் மூலம் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியைப் பிடித்ததிலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு தான்.
இதனால் கியூபா மீது அமெரிக்கா பல ஆண்டுகளாகப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதேபோல இந்த ஆண்டும் ஜனவரி மாதம் கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்தது.
ரூ.322 கோடி மோசடி.. லிஸ்ட் போட்டு புகார் சொல்லி.. எடப்பாடி பழனிசாமியை 'ஆப்' செய்த அமைச்சர்!
ஐநா தீர்மானம்
இந்நிலையில், கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.193 நாடுகளைக் கொண்ட ஐநா சபையில் 184 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, மியான்மார், மோல்டோவா மற்றும் சோமாலியா நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
அமெரிக்கா விளக்கம்
வாக்கெடுப்பிற்கு முன்னர் அமெரிக்க மிஷனின் தூதர் ரோட்னி ஹண்டர் கூறுகையில்,"ஒரு நாட்டிலுள்ள ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தப் பொருளாதாரத் தடைகள் முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால்தான் நாங்கள் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தோம். கியூபாவில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மீட்டெடுப்பதே எங்கள் முக்கிய கொள்கையாக உள்ளது. இதனை அடையப் பொருளாதாரத் தடைகளே ஒரு நியாயமான வழி. எனவே, இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா எதிர்க்கிறது" என்றார்.
கியூபா சாடல்
பைடன் நிர்வாகமும் டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டையே பின்பற்றுவதாகக் கியூபா வெளியுறவுத் துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் குற்றஞ்சாட்டினார். டிரம்ப் காலத்தில் கியூபா மீது பொருளாதார மற்றும் வணிக தடைகளைக் கடுமையாக்கப்பட்டது. அமெரிக்கர்கள் கியூபா செல்ல தடை விதிக்கப்பட்டது. இது கியூபாவின் சுற்றுலாத் துறைக்கு மிகப் பெரியளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்தத் தடைகளால் கியூபாவிற்கு சுமார் 5 பில்லியின் டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
டிரம்ப் காலம்
இது குறித்து கியூபா வெளியுறவுத் துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் கூறுகையில், "டிரம்ப் காலத்தில் விதிக்கப்பட்ட தடை தற்போது தொடர்கிறது. முரண்பாடாக, கொரோனாவால் கியூபா மிக மோசமாகப் பாதித்துள்ள நிலையிலும் அமெரிக்கா இதுபோல செயல்பட்டு வருகிறது. டிரம்ப் காலத்தில் போடப்பட்ட பொருளாதாரத் தடை, பயணக் கட்டுப்பாடுகளை மாற்றியமைப்போம் என்றே ஜனநாயகக் கட்சியினர் கூறினர். இரு நாடுகளுக்கும் இடையே தடையை நீக்குவதற்கும், சாதாரண உறவுகளை ஏற்படுத்துவதற்கும் பெரும்பான்மையான அமெரிக்கர்கள் ஆதவராகவே உள்ளனர்" என்றார்.
ஐநா தீர்மானம் உணர்த்துவது
கடந்த 2019 நவம்பர் மாதமும் ஐநா சபையின் 74ஆவது அமர்வில் அமெரிக்காவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், பிரேசில் மட்டுமே எதிராக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. ஐநா சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதன் மூலம் தடைகளை நீக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியாது. ஆனால் அவை உலக நாடுகளின் கருத்தைப் பிரதிபலிக்கின்றன.
அமெரிக்கா கியூபா உறவு
கடந்த 1959ஆம் ஆண்டு கியூபாவில் புரட்சியின் மூலம் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியைப் பிடித்தார். அப்போது, அக்கிருந்த அமெரிக்கா நிறுவனங்களின் கச்சா எண்ணெய் நிறுவனங்களைக் கியூபா தேசியமயமாக்கியது. அப்போது முதலே 1960ஆம் ஆண்டிலிருந்து கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து வருகிறது. அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டது. பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்தும்கூட ஆலோசிக்கப்பட்டது. இருப்பினும், டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பின் மீண்டும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.
அமெரிக்கா
கியூபா மக்கள் எதிர்கொள்ளும் சிக்கலை அமெரிக்கா உணர்வதாக அந்நாட்டுத் தூதர் ஹண்டர் தெரிவித்தார். அதனால்தான் ஆண்டுதோறும் கியூபாவிற்கு கணிசமான உணவு மற்றும் பொருட்களை அமெரிக்காவிலிருந்து அனுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் இந்தக் கருத்தை கியூவா வெளியுறவுத் துறை அமைச்சர் ரோட்ரிக்ஸ் கடுமையாக மறுத்துள்ளார்.
கியூபா பதிலடி
அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட பாதிப்புகள் கணக்கிட முடியாதது என்றும், அமெரிக்கா செய்வது மனித உரிமை மீறல் என்றும் குற்றஞ்சாட்டிய அவர், இது 1948 ஜெனீவா மாநாட்டின் கீழ் இனப்படுகொலைச் செயலாகக்கூடக் கருதலாம் எனக் கடுமையான வாதங்களை முன் வைத்தார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் மருத்துவத் துறையில் முக்கிய சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார். மேலும், அமெரிக்காவிலிருந்து உணவு இறக்குமதியையும் ஆண்டுதோறும் குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இல்லாமல் சுதந்திரமாக இருக்க உரிமை உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.