அமெரிக்க தேர்தல்.. நியூ ஹாம்ப்ஷயரில் முதலில் துவங்கிய வாக்குப் பதிவு.. பிற மாகாணங்களிலும் விறுவிறு
வாஷிங்டன்: அதிபர் தேர்தலையொட்டி, அமெரிக்க வடகிழக்கு மாகாணமான நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள டிக்ஸ்வில்லே நாட்ச் மற்றும் மில்ஸ்ஃபீல்ட் நகரங்களில் முதலில் வாக்குப் பதிவு துவங்கியது.
அமெரிக்க அதிபர் மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் கவர்னர் பதவிக்கான தேர்தலும் அங்கு நடக்கிறது.
இதன்பிறகு படிப்படியாக பிற மாகாணங்களிலும் வாக்குப் பதிவு துவங்கியது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கிய நிலையில், நாளை காலை 6.30 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது மக்களின் வாக்குகளால் மட்டும் கிடையாது. அமெரிக்க தேர்தல் முறையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிரதிநிதிகளின் மொத்த எண்ணிக்கை 538 இதில் 270 பிரதிநிதிகள் மற்றும் அதற்கு மேல் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ, அவர்கள்தான் அதிபராக முடியும்.
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் ஜெயிப்பார்... ஜாதகத்தில் கிரகங்கள் சாதகம் - ஜோதிடர் கணிப்பு
கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது நேரடி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை விட 28 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார் ஹிலாரி கிளிண்டன். ஆனால் தேவையான பிரதிநிதிகளை பெறவில்லை என்பதால், அவரால் அதிபராக முடியவில்லை என்பதே இதில் கவனிக்கத்தக்க தாக உள்ளது.
இந்த தேர்தலின் போதும் நேரடி வாக்குகள் அடிப்படையில் ஜோ பிடன் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் தேர்தல் முடிவில் யாருக்கு எத்தனை பிரதிநிதிகள் என்பதை பொறுத்துதான், வெற்றி-தோல்வி தெரியும்.