ஆடியில் பொங்கி வரும் ஆடிப் பெருக்கு
ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப் பெருக்கு பெயரில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டும் (விஷு ஆண்டு) ஆடி மாதம் 18ம் தேதி (03.08.2001) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரலட்சுமி விரதமும், ஆடிப் பெருக்கும் ஒரேநாளில் வருவது ஒரு சிறப்பம்சமாகும்.
ஆடிப் பெருக்கு தினம் காவேரி அம்மனுக்கு பூஜை செய்யும் நாளாகும். காவேரி நதியை தாயாக பாவித்து அவள் அருள் வேண்டி பிரார்த்திக்கும் நாள் ஆடிப்பெருக்கு நாள்.
பண்டை காலம் முதலே நதிகளை தெய்வமாக வழிபடும் வழக்கம் உடையவர்கள் தமிழ் மக்கள். நம் பண்டைக்கால நாகரிகத்தைப் பார்த்தால் அவர்கள்நதியை தெய்வமாக பாவித்து தினந்தோறும் பூஜித்து வந்தது தெரியவரும்.
அதே போல் வற்றாத ஜீவ நதியாக இருக்கும் காவிரி நதியை பூஜிப்பது வழக்கம்.
ஆடி மாதத்தில் காவிரியில் அதிகமான நீர் வரத்து காணப்படும். அன்று புதுமணத் தம்பதியினர் காவிரி ஆற்றுக்குச் சென்று சில சடங்குகள்,பூஜைகள் செய்வதுவழக்கம்.
வற்றாத ஜீவ நதியாய் காவிரி இருப்பது போல் தங்கள் வாழ்விலும் வற்றாத செல்வமும், மகிழ்ச்சியும் பொங்க வேண்டும் என காவிரி அம்மனைஅவர்கள் வணங்குவார்கள்.
முன் காலத்தில் வாகன வசதி குறைவான இருந்த காரணத்தால் நெடுந்தெலைவில் இருந்து காவிரிக்கு பூஜை செய்ய வருபவர்கள் பல விதமான உணவுவகைகளிலும் கொண்டு வந்து பூஜை முடிந்த பின் காவிரிக் கரையில் அமர்ந்து சாப்பிடுவது உண்டு.
அது வாகன வசதி அதிகமாகிவிட்ட இன்றும் தொடர்கிறது. பல விதமான பலகாரங்களையும், உணவையும் கொண்டு வந்து பூஜை முடிந்த பின் காவிரிக்கரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.
இன்றும் கூட காவிரியின் கிளை நதிகள் பாயும் எல்லா இடங்களிலும் இந்த பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கு அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்தது.
வற்றாத ஜீவ நதியாம் காவிரியை பூஜித்து நாமும் வளம் பெறுவோம்.