ஆடிக்கிருத்திகை விழா..திருத்தணியில் கோலாகலம்..தெப்ப உற்சவம் காண குவியும் பக்தர்கள்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
திருத்தணி: ஆடிக்கிருத்திகை விழா திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடியுடன் வந்து முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இன்று முதல் 25ஆம் தேதி வரைக்கும் 3 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
Recommended Video
முக்கிய நிகழ்ச்சியான ஆடி பரணி நேற்று அதிகாலை தொடங்கியது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிவப்பு, மஞ்சள் ஆடை அணிந்து காவடி எடுத்து வந்த பக்தர்கள், சரவணப் பொய்கை மற்றும் நல்லான் குளத்தில் நீராடிவிட்டு மலை படிக்கட்டு வழியாக நடந்து மலை கோயிலுக்கு வந்தனர்.

அங்கு, நீண்ட வரிசையில் நின்று நேர்த்தி கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு கோயில் மலர், வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மலையடிவாரத்தில் இருந்து மலைக்கோயில் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இன்று ஆடிக்கிருத்திகை விழா நடைபெறுவதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றர். பன்னீர் காவடி, புஷ்பக்காவடி போன்ற பல காவடிகளை சுமந்து வந்து முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பக்தர்கள் வசதிக்காக திருத்தணி - சித்தூர் சாலையில் உள்ள முருகூர் பகுதியிலும், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பட்டாபிராமபுரம் மற்றும் தரணிவராகபுரம் ஆகிய பகுதிகளிலும், அரக்கோணம் சாலையில் உள்ள பேருந்து பணிமனை அருகே என 3 இடங்களில் தற்காலி பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது. பஸ், கார், உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள், இந்த இடங்களில் நிறுத்திவிட்டு நடந்து சென்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
இன்றைய தினம் மாலையில் முதல்நாள் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இதில் முருகர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வருகின்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு கோயில் நிர்வாகம் தரப்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்கள் நகருக்குள் வாகனங்களில் செல்ல வேண்டும் என்றால் ஆதார் கார்டை காண்பித்தால் நகருக்குள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக, 7094400102, 7094400103 மற்றும் 7094400108 ஆகிய அலை பேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கோயில் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications