ஆடி பவுர்ணமி..வியாழக்கிழமை விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
மதுரை: ஆடி பவுர்ணமி தினம் வியாழக்கிழமை வருகிறது. சிறப்பான இந்த நாளில் நாம் சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும் வழிபட வேண்டும். இந்த ஆடிப் பௌர்ணமி தினத்தில் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும் அதனால் நமக்கு ஏற்படும் சிறப்பான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் மாதம் சூரியனை அடிப்படையாக கொண்டது. சூரியன் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்ககூடிய காலத்தை ஒவ்வொரு தமிழ் மாதமாக பின்பற்றப்படுகிறது.
அந்த வகையில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கக்கூடிய மாதம் ஆடி மாதம். ஆடி மாதம் இறைத்துவம் பொருந்திய மாதந்தகளில் ஒன்று. இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதமாகவும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நம் முன்னோர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தான் ஆடி பெருக்கு என்ற தினத்தை வைத்து விவசாய தொழிலை தொடங்கினர்.
நீலகிரி, கோவையில் கனமழை நீடிக்கும்..6 மாவட்ட மக்களும் உஷார்..எச்சரிக்கும் வானிலை மையம்
வியாழக்கிழமை பவுர்ணமி
இந்த ஆண்டு ஆடி பெளர்ணமி ஆகஸ்ட் 11ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. ஆடி மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினம் பொதுவாக உத்திராட நட்சத்திரம் வரும். இந்த ஆடி பெளர்ணமி தினம் மகா விஷ்ணுவை வழிபடுவதற்கான மிக உன்னத நாள். வியாழக்கிழமை அன்று வரும் பௌர்ணமி நாளில் குரு பகவானை வணங்க தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் பெருகும். குருவை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாளாக இந்நாள் இருக்கும். இந்த நாளில் குரு திசை நடப்பவர்கள், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரகாரர்கள், துர்க்கை அம்மனுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்து, தயிர் சாதம் மற்றும் மஞ்சள் நிற பழங்கள் நிவேதனம் வைத்து வழிபட சகல வளங்களும் பெறுவார்கள்.
அம்மன் வழிபாடு
பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.
பௌர்ணமி அன்று விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. ஆடி மாத பௌர்ணமி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் காலை நேரத்தில் குளிக்காமல் அருகிலுள்ள அம்மன் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்மன் அல்லது அம்பாள் தெய்வங்களுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வஸ்திரம் சாற்றி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்து வழிபாடு செய்வது சிறந்தது. பல வகையான வாசம் மிக்க பூக்களால் அர்ச்சனை செய்வதோடு, அறுகம்புல்லாலும் அம்மனுக்கு அர்ச்சனை மிகவும் சிறப்பானதாகும்.
அம்மனுக்கு பாலபிஷேகம்
ஆடி பௌர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களை கொடுக்கும். பூஜையை முடித்த பின்பு நைவேத்தியப் பிரசாதத்தையும், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை கோயிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். இதுபோல வழிபட்டால் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அறவே நீங்கி லாபங்கள் பெருகும். நோய்நொடிகள் ஏற்படாமல் காக்கும்.
பதவிகள் தேடி வரும்
ஆடி பெளர்ணமி தினத்தில் உத்திரம், திருவோண நட்சத்திரம் இணைந்திருப்பதால் திருமாலுக்கு விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. இந்த அற்புத நாளில் வீட்டில் விளக்கேற்றி திருமாலை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும். புண்ணியம் கிடைக்கும். அதோடு உத்தியோகஸ்தர்கள் நினைத்த பதவி கிடைக்கக்கூடும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும்.
நோய்கள் நீங்கும்
ஆடி பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசி பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும். பொதுவாக பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.