சபரிமலையில் நாளை மண்டலபூஜை..தங்க அங்கியில் இன்று ஜொலிக்கப்போகும் ஐயப்பன்..குவியும் பக்தர்கள்
சபரிமலை: ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். தங்க அங்கி ஊர்வலம் இன்று சன்னிதானம் வர உள்ளது. மாலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. ஐயப்பனுக்கு 450 சவரன் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
சபரிமலையில் மாத பிறப்பு நாளில் 5 நாட்களுக்கு சாமி தரிசனத்திற்கு நடை திறந்தாலும் கார்த்திகை, மார்கழி, தை மாதத்தில் நடைபெறும் மண்டலபூஜை,மகரவிளக்கு பூஜை காலங்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறந்த நாள் முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து கொண்டுள்ளனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதில் ஒரு சில நாட்களில் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் மேல் இருந்தது. இதுபோக நிலக்கல் உள்பட பல இடங்களில் உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.
இதனால் கேரளா மாநில உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. முதியோர், பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நடப்பு சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை நடக்கிறது. இன்றைய தினம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், நாளைய தினம் 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973-ம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி இன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வந்த தங்க அங்கி ஊர்வலம் கடந்த 23ஆம் தேதி சபரிமலைக்கு புறப்பட்டது.
இந்த ஊர்வலம் இன்று பிற்பகல் பம்பை கணபதி கோவில் வந்தடைகிறது. அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு வருவார்கள். மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.
அப்போது 18ஆம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு ராஜீவரரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும். பின்னர் 18-ம் படி வழியாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்பட்டு மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும். தங்க அங்கியை இன்று சன்னிதானத்துக்கு கொண்டு வருவதையொட்டி இன்று பிற்பகலில் 18ஆம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை.
நாளைய தினம் மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 11 மணிக்கு களபாபிஷேகம் முடிந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் தங்கி அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும். பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜைகளுக்கு பின் இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டல பூஜை நிறைவு பெறும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 30-ந் தேதி திறக்கப்படும். மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெறும்.












Click it and Unblock the Notifications