பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்..குலுக்கல் மூலம் 2000 பேர் தேர்வு..மூலவர் தரிசனம் 27 வரை ரத்து
பழனி: யாகசாலை பூஜையுடன் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக பணிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது தண்டாயுதபாணி சுவாமி கோவில். ஜனவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை காண 6000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 2000 பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் 17ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பூர்வாங்க பணிகள் கடந்த 18ஆம் தேதி முதல் தொடங்கியது. அன்று காலை 9 மணி அளவில் மலைக்கோவிலில் உள்ள ராஜகோபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட கலசங்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தாபனம் செய்யப்பட்டது. இதில் ஏராளாமான பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து 4 மணிக்கு சாயரட்சசை பூஜையும், அதனைத் தொடர்ந்து 5 மணிக்கு யாகசாலையில் தீப வழிபாடும் நடைபெறுகிறது. அதன்பின் மங்கள இசையுடன் பழனி கோவில் தவில் நாதஸ்வர குழுவினர்களின் தீபத்திருமகள் வழிபாடு, திருவிளக்கேற்றுதல், கோவில் ஓதுவார் மூர்த்திகள் பண்ணிசை திருநேரிசை, 4-ம் திருமுறை, இறைவன் அனுமதி பெறுதல், முழு முதற்கடவுள், முதல்நிலை வழிபாடு, பேரொளி வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருஒளி வழிபாடு, திருநீறு, அமுது வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் யாகசாலை பூஜைகள் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. தண்டாயுதபாணி சுவாமி கலசத்தில் ஆவாஹனம் செய்த பின் யாகசாலையில் எழுந்தருளினார். வருகிற 26ஆம் தேதி படிப்பாதை சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் நிலையில் அதுவரை பக்தர்கள் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்படுவார்கள். 27ஆம் தேதி நடக்கும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவில் இணையதளத்தில் கடந்த 18ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை நேரில் காண 6,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதில் 2,000 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.இதையடுத்து, கடந்த 3 நாட்களாக இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பணி நடந்தது. 60,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்தனர். நேற்று மாலை கணினி மூலம் குலுக்கல் முறையில் 2,000 பக்தர்களை தேர்வு செய்யும் பணி நடந்தது. அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.
உறுப்பினர் சுப்பிரமணி, கோயில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அவர்கள் இன்றும் நாளையும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை அடையாளச் சான்று நகலுடன் வேலவன் விடுதியில் கும்பாபிஷேகத்தை காண்பதற்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் மாலை 3 மணி முதல் ஜனவரி 26ஆம் தேதி வரை பக்தர்கள் மூலவர் தண்டாயுதபாணியை தரிசனம் செய்ய முடியாது. அதே சமயம் யாக சாலையில் எழுந்தருளும் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். 27ஆம் தேதி கும்பாபிஷேகம் முடிந்ததும் வழக்கம்போல் பக்தர்கள் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். இன்று முதல் 27ஆம் தேதி வரை கால பூஜை கட்டளைகள், தங்கரதப் புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.