சபரிமலை மண்டல பூஜை: ஐயப்ப பக்தர்களுக்கு தேவசம்போர்டின் புது ரூல்ஸ்.. முழு விபரம்
சபரிமலை : ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், கோயில் நிர்வாகம் சார்பாக ஐயப்ப பக்தர்களுக்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று முதல் 41 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வைத்து கருவறையில் தீபம் ஏற்றினார். அதன்பின் கோயில் முன் உள்ள ஆழி குண்டம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணியளவில் அபிஷேகம் நடத்தப்பட்டு இரவு 10 மணியளவில் கோயில் நடை அடைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த இரு ஆண்டுகளாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவை தற்போது தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடங்கிய சீசன்.. அதிகாலை சபரிமலை நடை திறப்பு! மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள்! இன்று முதல் சிறப்பு பஸ்கள்
பக்தர்களுக்கு புது ரூல்ஸ்
சபரிமலை கோயிலுக்கு சரக்கு வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. இருசக்கர வாகனத்தில் செல்லும் பக்தர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம், தனியார் வாகனங்களில் செல்லும் பக்தர்கள் , நிலக்கலில் வாகனங்களை நிறுத்த வேண்டும். பம்பையில் இடம் இருந்தால் சிறு வாகனங்களை அங்கு நிறுத்திக்கொள்ளலாம்.
பக்தர்கள் யாத்திரை
பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் அனைத்து பக்தர்களும் அங்கிருந்து 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து மலை ஏறி செல்ல வேண்டும் சுவாமி ஐயப்பன் பாதை, கரிமலை பாதை இரு பாதைகள் வழியாக பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல முடியும். எருமேலி வரை வாகனத்தில் சென்ற பின்னர் அங்கிருந்து பெருவழி பாதை, அழுதை நதி வழியாக சன்னிதானம் நடந்து செல்லலாம்.
வயதான பக்தர்களுக்கு ஏற்பாடுகள்
முதியோர், நடந்து செல்ல சிரமம் உள்ள பக்தர்கள் 1500 ரூபாய் கட்டணம் செலுத்தி டோலி மூலம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐயப்ப பக்தர்கள் யாத்திரை செல்லும் பாதைகளில் பாதுகாப்பு, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்துள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்
தினசரி ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்தாலும் சமாளிக்கும் வகையில் திருவிதாங்கூர் தேவசம் சார்பில் அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆன்லைன் புக்கிங் அவசியம். கடந்த காலங்களில் ஆன்லைன் முன்பதிவு கேரள போலீஸ் கவனித்து வந்தது. இப்போது, ஆன்லைன் புக்கிங் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் நடந்து வருகிறது என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்பாட் புக்கிங் வசதி
ஆன்லைனில் புக்கிங் செய்ய தவறியவர்களுக்காக சபரிமலையில் 12 இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் ஸ்ரீகண்டேஸ்வரம் திருவனந்தபுரம் மணிகண்டேஸ்வரம், பந்தளம் வலியகோயிக்கல் கோவில் செங்கனூர் ரயில் நிலையம் உள்ளிட்ட 12 இடங்களில் ஸ்பாட் புக்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தங்கும் விடுதிகளில் புக்கிங்
பம்பா, சன்னிதானம் பகுதிகளில் TDB. com மூலம் தேவசம் போர்டு தங்கும் விடுதிகளில் ஆன்லைன் புக்கிங் செய்யலாம், விடுதிகள் நிரம்பினால் அந்த பகுதிகளில் பக்தர்கள் விரி வைத்து தூங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மூத்த குடிமக்கள் வரிசையில் நிற்காமல் நேரடியாக தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.