கந்த சஷ்டி..திருச்செந்தூர் சுவாமி கோவிலில் யாகசாலையுடன் தொடக்கம்..30ல் சூரசம்ஹாரம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 30ஆம் தேதி கடற்கரையில் நடைபெறும். 31ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை..சுப்ரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள். முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கார்த்திகை விரதம் போன்ற விழாக்கள் இருந்தாலும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி விழா சிறப்பானது.
ஆண்டு தோறும் தீபாவளிக்கு மறுநாள் தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் உண்ணாமல் விரதம் இருந்து முருகனை நினைத்து கந்த சஷ்டி கவசம் படித்து வழிபடுவார்கள். முருகப்பெருமானை கந்த சஷ்டி விரதம் இருந்து வழிபாட்டால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி
அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
சிறப்பு அபிஷேகம்
காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனையும், மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கின்றது.
மாலையில் நடை அடைப்பு
தொடர்ந்து சுவாமி-அம்பாள்கள் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடத்தப்பட்டு, வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி கிரி வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். இன்று சூரிய கிரகணம் நிகழ்வதால் மாலை 4 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. 6.45 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு மற்ற பூஜைகள் நடக்கிறது.
சூரசம்ஹாரம்
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 30ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கிறது. 31ஆம் தேதி இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவு பெறுகிறது.
முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விரதம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழனி, சுவாமிமலை உள்ளிட்ட பல முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் முருகன் கோவில்களில் குவிந்துள்ளனர். 6 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் விரதத்தை முடித்துக்கொள்வார்கள். திருக்கல்யாணத்தை தரிசனம் செய்த பின்னர் வீடு திரும்புவார்கள்.