திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா.. 25ல் யாகசாலை தொடக்கம்..30ல் சூரசம்ஹாரம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வரும் 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்க உள்ளது. 30ஆம் தேதியன்று கடற்கரையில் சூரம்சம்ஹாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படைவீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில். இங்கு ஆவணி, மாசி திருவிழாவிக்கள் பிரசித்தி பெற்றவை.
ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு திருவிழா வருகிற 25ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கந்த சஷ்டி விழா
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபதரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளுவார். அங்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.

சூரிய கிரகணம்
காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அன்றையதினம் மாலை 5 மணியில் இருந்து 6.15 மணி வரை சூரியகிரகணம் நடக்கிறது. அதனால் மாலை 4 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தி நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 6.45 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மற்ற காலங்கள் மற்றும் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.

கந்த சஷ்டி விழா
26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 4 நாட்கள் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிசேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 6ஆம் திருவிழாவான 30ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

சூரசம்ஹாரம்
1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. 7ஆம் திருவிழாவான 31ஆம் தேதி கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.

திருக்கல்யாணம்
அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு மாலை மாற்று வைபவம் நடக்கிறது. தொடர்ந்து இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாமிமலையில் கந்த சஷ்டி விழா
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகே சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலானது முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும். இங்கே சூரபத்மனை, முருகன் வதம் செய்த 'சூரசம்ஹார' நிகழ்வு கந்த சஷ்டி திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வரும் 24ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, அடுத்த மாதம் நவம்பர் 4ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கந்த சஷ்டி விழாவில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கற்கண்டு பால் வழங்க கோவில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications