சூரிய கிரகணம்.. தோஷம் நீங்க கோவில்களில் பரிகார பூஜைகள்..திருவண்ணாமலை, நெல்லையில் தீர்த்தவாரி
சென்னை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்மதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை நெல்லையப்பர் கோயிலில் சூரிய கிரகண சாந்தி தீர்த்தவாரி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கோவில்களில் நடைபெற்ற பரிகார பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நேற்று மாலை நிகழ்ந்தது. கிரகண காலம் தோஷ காலம் என்பதால் நாடு முழுவதும் பல கோவில்களின் நடை மூடப்பட்டது. தமிழகத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், திருத்தணி முருகன் கோவில்களில் நடை திறக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் வழக்கம் போல அனுமதிக்கப்பட்டனர்.
திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் சூரிய கிரகண காலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூரிய கிரகணம் முடிந்த பின்னர் இரவு ஏழு மணிக்கு மேல் கோவில்கள் திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்றைய தினம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக இக்கோவிலில் சூரிய கிரகணம் தொடங்கும் போது கோவில் 4-ம் பிரகாரத்தில் உள்ள பிரம்மதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று மாலை 5.17 முதல் 6.24 மணி வரை சூரிய கிரகணம் இருந்ததால் கிரகணம் தொடங்கும் முன்பு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவிலில் தீர்த்தவாரி
பிரம்மதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி முன்னதாக அருணாசலேஸ்வரரின் அம்சமான சூலரூபத்தில் உள்ள அஸ்திரதேவர், மங்கல வாத்தியங்கள் முழங்க பிரம்ம தீர்த்த குளக்கரையில் எழுந்தருளினார். பின்னர் பிரம்ம தீர்த்த குளக்கரையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அஸ்திரதேவருக்கு பச்சரிசி மாவு, அபிஷேக பொடி, பால், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட அபிஷேக திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜை செய்த புனித கலச நீரை ஊற்றி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலியில் பரிகார பூஜை
சூரிய கிரகணத்தை ஒட்டி, நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் நண்பகல் 12 மணிக்கு நடைஅடைக்கப்பட்டது. பின்னர், சூரிய கிரகணம் நிறைவடைந்த பிறகு, நெல்லையப்பர் திருக்கோவில் பொற்றாமரை குளத்தில், சுவாமி சந்திரசேகரர் பவானி அம்பாளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

ராமேஸ்வரத்தில் பரிகார பூஜை
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை நேற்று பகல் 1 மணியளவில் அடைக்கப்பட்டது. திருக்கோவில் வளாகத்தில் உள்ள தீர்த்த கிணறுகள் 11 மணி அளவில் மூடப்பட்டதால் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டது. 4 மணிக்கு மேல் கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்காக சுவாமி அக்னி தீர்த்த கடற்கரைக்கு புறப்பட்டு மாலை 6 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாள் சன்னதியில் நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வந்துள்ள ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் திருக்கோவிலில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications