Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூரசம்ஹாரம்..தமிழ் கடவுள் முருகன் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள்.. எங்கும் எதிரொலித்த அரோகரா முழக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என முழக்கமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் கந்த சஷ்டி விழா தமிழகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் கோலாகலமாக தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். ஆறாவது நாளான நேற்றைய தினம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் திருத்தணி தவிர அனைத்து முருகன் ஆலயங்களிலும் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.

அழகன் என்றும் தமிழ் கடவுள் என்றும் போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக அமையப்பெற்ற கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது தமிழ் வருட தேவதைகள் அறுபது படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வருகை தரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம்.

சுவாமிமலை

சுவாமிமலை

கட்டுமலை கோயிலான இத்தலத்தில் தான் முருகப்பெருமான், தன் தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரப்பொருளை குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்ற பெருமை கொண்டது சுவாமிக்கே (சிவபெருமானுக்கே) நாதன் (குருவானதால்) ஆனதால் இத்தல முருகப்பெருமான் சுவாமிநாதசுவாமி என போற்றப்படுகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்தது, நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருபுகழிலும் பாடல் பெற்றது என பெருமை கொண்டதாகும். இத்தகைய சிறப்பு பெற்ற சுவாமிமலையில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா பத்து தினங்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கந்தசஷ்டியை யொட்டி, உற்சவர் வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சண்முகசுவாமிக்கு திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வகை பொருட்களை கொண்டும் அபிஷேகம் தொடர்ந்து விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது, அதே வேளையில், மூலவர் சுவாமிநாதசுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து தங்க கவசம் மற்றும் வைர வேலுடன் அருள்பாலித்த மூலவர் சுவாமிநாதசுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீ சண்முகசுவாமி, மீனாட்சியம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கோயில் வளாகத்திற்குள்ளாகவே, இரவு சூரசம்ஹாரமும் நடைபெற்றது. இன்றைய தினம் இரவு தேவசேனா திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.

பழமுதிர் சோலை

பழமுதிர் சோலை

கந்த சஷ்டி விழா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அறுபடைவீடுகள் உட்பட அனைத்து முருகன் கோவில்களிலும் காப்புகட்டுதலுடன் துவங்கியது. இதற்காக பக்தர்கள் ஒருவாரம் கோயிலில் தங்கி இருந்து விரதமிருப்பர்.
அதனைத் தொடர்ந்து நிறைவுநாள் நிகழ்ச்சியில் சூரனை முருகன் சம்ஹாரம் செய்வார்.
அந்தவகையில் நிறைவுநாள் நிகழ்ச்சியான இன்று மதுரை மாவட்டம் அழகர் கோயில் அறுபடைவீடுகளில் ஆறாம் படைவீடான பழமுதிர்சோலை முருகன் கோவிலில் தனது தாயிடம் இருந்து வேல்வாங்கிய முருகபெருமான் சூரனை சம்ஹாரம் செய்தார். அதனைத்தொடர்ந்து முருகபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் தீபராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.

சிக்கல் சிங்கார வேலர்

சிக்கல் சிங்கார வேலர்

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் இன்று சூரசம்ஹார திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் எழுந்தருளிய முருகப் பெருமான் மூன்று முறை அம்புகளால் சூரனை வதம் செய்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, என பக்தி பரவசத்தில் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சூரபத்மனை வதம் செய்த முருகப் பெருமான் ஆசுவாசம் அடைந்து பின்னர் கோவிலில் சென்று அமர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வேண்டி சுவாமி தரிசனம் செய்தனர். சூரசம்ஹார திருவிழாவையொட்டி சிக்கல் கோவிலில் வண்ணமயமான வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

மருதமலை

மருதமலை

கோவை மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். கோவை மேற்கு மலை தொடர்ச்சியில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.இக் கோவில் ஏழாவது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரத்தை ஒட்டி நேற்று அதிகாலை 6 மணிக்கு கோபூஜை நடைபெற்றது. மதியம் மூன்று மணியளவில் மூலவரிடமிருந்து வேல் வாங்கி பச்சைநாயகி அம்மனிடம் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் சுவாமி அம்பாளிடம் வேலை பெற்றுக்கொண்டு ஆட்டுக்கிடா வாகனத்தில் கோவிலின் முன்புறம் எழுந்தருளினார்.

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்

வீரபாகு தேவர் குதிரை வாகனத்திலும் எழுந்தருளினார். இருவரும் கோவிலை சுற்றி வீதிஉலா வந்தனர். அதை தொடர்ந்து முருக பெருமான் முதலில் தாரகா சூரனை வதம் செய்தார். இரண்டாவதாக பானுகோபன் வதம், மூன்றாவதாக சிங்கமுகாசுரன் வதம் நான்காவதாக சூரபத்மனை தனது வேலால் தலையை துண்டித்து முருக பெருமான் வதம் செய்தார். அப்போது அங்கு திரளாக கூடியிருந்த பக்தர்களும் கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களும் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். கந்த சஷ்டி விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சூரசம்காரம் செய்த சுவாமியின் கோபம் தணிக்கும் விதமாக மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில்

சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு வழிபாட்டுக்கு பின் நவரத்தின அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் கோவில் தங்க கொடிமரம் அருகே சிவபெருமானிடம் தங்கவேல் வாங்கி கோவிலை வலம் வந்து மேற்கு கோபு வாசல் வழியாக சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார். சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் ஐதீக நிகழ்வு சிவாச்சாரியார்களால் தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது

வைத்தியநாத சுவாமி

வைத்தியநாத சுவாமி

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முருகப் பெருமான் வாகனத்தில் கோயில் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து எழுந்தருளி சூரனுடன் போர்புரிந்து சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+