ஆண்டாள் சூடி கொடுத்த மாலை அணிந்து அருள்பாலிக்கும் மலையப்பசுவாமி.. திருப்பதி கருடசேவை சுவாரஸ்யங்கள்
திருப்பதி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை அணிந்து கருட வாகனத்தில் எழுந்தருளப்போகிறார் மலையப்பசுவாமி. புரட்டாசி சனிக்கிழமையன்று கருடவாகன சேவை நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வந்தவண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்பதால் வாகனங்களில் வருபவர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
புராண - இதிகாச காலத்தில் பிரம்மனே திருமலைக்கு வந்து மலையப்பசாமிக்கு பிரம்மோற்சவ விழாவைக் கொண்டாடியதாக ஐதிகம். இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறுவதை முன்னிட்டு பூலோக சொர்க்கமாக மாறியுள்ளது. மின்விளக்கு, மலர் அலங்காரத்தில் கோவில் ஜொலிக்கிறது.
மலையப்பசுவாமி தினந்தோறும் காலையிலும் மாலையிலும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடிப்பூரம்... ரங்கநாதர் பரிசளித்த பட்டு வஸ்திரம்..தேரில் வலம் வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
மலையப்பசுவாமி
முதல்நாள் ஷேச வாகனங்களிலும் மறுநாள் ஹம்ச வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளினார். பெருமாளிடம் நம் மனதைத் தூய்மையாக்கி ஆத்மநிவேதனம் செய்து ஒப்படைப்பவனையே பகவான் ஏற்கிறார் என்பதை விளக்கவே இந்த அன்னப்பறவை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார்.
சிம்ம வாகனம் முத்துப்பந்தல் வாகனம்
மூன்றாம் நாள் காலையில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். தீயோர்களை அழித்து நல்லவர்களைக் காப்பதை அறிவுறுத்தும் வாகனம் சிம்ம வாகனம். சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் சுவாமியைத் தரிசித்தால், நமக்கு எதிரிகளின் தொல்லை இருக்காது என்பது ஐதிகம். அன்றைய தினம் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் அருள்பாலத்தார். நன்முத்துக்கள் குளிர்ச்சிக்கு அடையாளம். சந்திரன் உச்சம் பெறும் தலமான திருவேங்கடத்தில் முத்துப்பந்தல் மிகவும் சிறப்பானது.
கற்ப விருட்ச வாகனம்
பிரம்மோற்சவ விழாவின் 4வது நாளான இன்று காலை கற்ப விருட்ச வாகனத்தில் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளை இந்த வாகனத்தில் தரிசனம் செய்தால் மலையப்பசுவாமி கேட்கும் வரங்களை தருவார். கேட்டதை தரும் மரம், கற்பக விருட்சம். அதே போன்று கற்பகவிருட்ச வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசனம் செய்ய கேட்கும் வரங்களோடு கேட்காத வரங்களையும் வாரி வழங்குவார் பெருமாள். இன்றிரவு சர்வ பூபால சேவையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மோகினி அலங்காரம்
ஐந்தாம் நாளான நாளை காலையில் மலையப்பசுவாமி மோகினி அவதாரத்தில் அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணு மோகினி அவதாரத்தில் எழுந்தருளி அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்கினார். எனவே, மோகினி அவதாரத்தில் வலம் வரும் பெருமாளை தரிசனம் செய்ய வாழ்வில் நன்மை என்னும் அமிர்தம் பொங்கும் என்பது ஐதிகம். நாளை இரவு கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார் மலையப்பசுவாமி.
கருட வாகன சேவை
பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளில் கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்களைந்த மாலையும், கிளி மங்கல பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவது காலம் காலமாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு இன்றைய தினம் கருட வாகன சேவை நடைபெறுவதை முன்னிடு மலையப்பசுவாமி அணிவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் களைந்தமாலை, வஸ்திரம், கிளி ஆகிய மங்கலப் பொருட்கள் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை
காலை 9 மணிக்கு ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து ஏழுமலையானுக்கு அணிவிக்கக்கூடிய மாலையை ஆண்டாள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன் பிறகு ஆண்டாள் மாலை, பரிவட்டம், கிளி ஆகியவை பெரிய கூடையில் வைத்து யானை முன்செல்ல பட்டர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் ஊர்வலமாக வந்தனர். இதில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, ராம்கோ நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வாகனத்தில் வைத்து, மாலை உள்ளிட்டவை திருப்பதி கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருமலைக்கு வந்த ஆண்டாள் மாலை
ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மாலைகள், கிளி, வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் மாடவீதி வழியே ஊர்வலமாகக் கொண்டு வந்து பின்னர் கார் மூலம் திருப்பதி கொண்டு செல்லப்பட்டன. அங்கு பெரிய ஜீயர் மடத்தில் மங்கலப் பொருட்கள் திருமலை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மாலைகள் நாளை மூலவர் ஏழுமலையானுக்கும் உற்சவர் மலையப்பசுவாமிக்கும் அணிவிக்கப்படும்.
பெரிய திருவடி சேவை
பெரிய திருவடி என்னும் கருட வாகனத்தில் எம்பெருமான் நாளை இரவு எழுந்தருளுவார். பிரம்மோற்சவ விழாவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இந்த நாள் கருதப்படுகிறது. அதனால் கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளும் இந்நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள். இதையொட்டித் திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பெருமாளே வரமாகக் கேட்டுப் பெற்ற சிறப்பினுக்கு உரியது கருட வாகனம். கருட சேவையில் எழுந்தருளும் பகவானை தரிசித்தால் சகல பயங்களும் நீங்கும் என்பது ஐதிகம்.
பிரம்மோற்சவம் ஏற்பாடுகள்
கருடவாகன சேவையை காண வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களின் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்காக 13,000 வாகனங்கள் நிறுத்தும் விதமாக திருமலையில் பல்வேறு இடங்களில் வாகனம் நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 13,000 வாகனங்களுக்கு மேல் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் திருப்பதியிலேயே நிறுத்தி நிறுத்தப்படும் என ஏற்கனவே தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை
கருட சேவை காண வரும் பக்தர்களை அழைத்து வருவதற்காக அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாலும் கருடசேவை முடிந்த பிறகு திருப்பதி செல்ல தொடர்ந்து பேருந்து சேவை இருக்கும் என்பதால் பேருந்துக்கு இருச்சக்கர வாகன ஓட்டிகள் இடையூறாக இருக்கும் என்பதால் இன்று மதியம் 1 மணி முதல் 2ம் தேதி காலை வரை இருசக்கர வாகனங்களுக்கு திருப்பதி மலைப்பாதையில் அனுமதி கிடையாது என தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் திருப்பதியில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்களை வைத்துவிட்டு அரசு பேருந்து மூலம் திருமலைக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.