தை பொங்கல்.. தை அமாவாசை.. தை பூசம்.. என்னென்ன விரதங்கள்..விஷேசங்கள்
சென்னை: தை மாதம் அற்புதமான மாதம். தை பிறந்தாலே அனைவருக்கும் நல்ல வழி பிறக்கும். மகர ராசியில் சூரியன் பயணம் செய்யும் மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாள் சூரியன் தட்சிணாயண பாதையில் இருந்து உத்தராயண பாதைக்கு அடி எடுத்து வைக்கும் நாள். இதை உத்தராயண புண்ணிய காலம் என்று அழைக்கிறார்கள். தை மாதத்தின் சிறப்புகளையும் தை மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்களையும் விஷேச நாட்களையும் பார்க்கலாம்.
தை பிறந்தால் ஒளி பிறக்கும், ஒளிபிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்முடைய பண்டைய தத்துவம். ஆடிப்பட்டம் தேடி விதைத்து பயிரை பேணி வளர்த்து அறுவடை செய்து புது நெல்லை குத்தி விவசாயிகள் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுகின்ற வெற்றி திருநாள் தை பொங்கல். கால்நடைகளுக்கு நன்றி செலுத்த மாட்டுப் பொங்கல் வைக்கிறார்கள். மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டு என்று காளை மாடுகளில் நடக்கும் வீர விளையாட்டும் நடத்தப்படுகிறது. இதற்கு ஏறு தழுவுதல் என்று நமது பண்டைய தமிழர்கள் பெயர் வைத்து பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்.
அன்பை பரிமாறிக் கொள்ள காணும் பொங்கல் நடத்துகிறார்கள்.மேலும் கந்தபுராணத்தில் தன்னுடைய சக்தியெல்லாம் ஒன்று திரட்டி வேலாக மாற்றி சக்திவேலாக சூரபத்மனை வதம் செய்ய முருகனுக்கு பார்வதி வழங்கினார். ஆடி அமாவாசை போல் தை அமாவாசையும் பித்ருக்கள் கடன் செய்ய மிக சிறப்பான நாள். தை அமாவாசை விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக சித்திக்கும்.
தை மாதத்தில் வருகின்ற ரத சப்தமி விரதம் இருந்து சூரியனை வழிபட்டால் நம் உடலில் பிடித்திருக்கும் நோய்கள் அகலும். தை மாதத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமைகளில் வீரபத்ர வழிபாடு செய்தால் தடைகள் விலகும். எதிர்ப்புகள் சிதறும். எதிரிகள் மறைந்து போவார்கள். தை மாதத்தில் வளர்பிறையில் வருகின்ற பஞ்சமிக்கு வசந்த பஞ்சமி என்று பெயர். இது சரஸ்வதி தேவி அவதரித்த நாள். இந்த நாளில் விரதம் இருந்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
இந்த மாதத்தில் தேய்பிறையில் வருகின்ற ஏகாதசிக்கு ஷபலா ஏகாதசி என்ற பெயர். இந்த நாளில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் சகலதோஷங்களும் பாவங்களும் நீங்கும். சாவித்திரி கௌரி விரதத்தை தைமாதம் இரண்டாம் நாள் கடைப்பிடித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும். சிரஞ்சீவியான மார்க்கண்டேயர் இந்த விரதத்தின் மகிமையை தருமருக்கு உபதேசித்தார். அப்படிப்பட்ட அற்புதம் மிகுந்த தை மாதத்தில் வரும் முக்கிய விஷேச நாட்கள் விரத நாட்களைப் பார்க்கலாம்.
தை 1 : உத்ராயண புண்ணிய காலம், பொங்கல் பண்டிகை
தை 2 : மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம்
தை 4 : ஷபலா ஏகாதசி
தை 7 : தை அமாவாசை சர்வ அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏற்ற நாள்.
தை 8 : சியாமள நவராத்திரி பூஜை ஆரம்பம்,
தை 11 : வசந்த பஞ்சமி
தை 12: வீடு கட்ட வாஸ்து செய்ய ஏற்ற நாள்.
தை 14 : ரத சப்தமி, சூரிய ஜெயந்தி
தை 16 : சியாமள நவராத்திரி பூஜை முடிவு, தை கிருத்திகை முருகன் கோவில்களில் வழிபட நல்ல நாள்.
தை 18: ஜெய ஏகாதசி
தை 19 : பீம துவாதசி, பீஷ்ம துவாதசி
தை 20: ஸ்ரீரங்கம் பூபதித்தேர்
தை 22 : தைப்பூசம், வடலூர் ஜோதி தரிசனம்
தை 27 : கூரத்தாழ்வார்
ஜல்லிக்கட்டு போட்டிகள் எப்போது எங்கே நடைபெறும்? சீறி பாய தயாராகும் காளைகள்.. களைக்கட்டும் பொங்கல்