வடலூர் வள்ளலார் நினைவு தினம்..7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்..பிப்.5ல் டாஸ்மாக், பார்கள் மூடல்
வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு தமிழகம்,புதுச்சேரி, காரைக்காலில் வரும் 5ஆம் தேதி டாஸ்மாக், பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய தரும ஞான சபையில் பிப்ரவரி 4ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறும் என்றும் பிப்ரவரி 5ஆம் தேதி ஜோதி தரிசனம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடலூரில் ஜோதி தரிசனத்தை முன்னிட்டு பிப்ரவரி 5 ஆம் தேதியன்று தமிழகம்,புதுச்சேரி, காரைக்காலில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலாரின் ஜோதி தரிசன விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் வடலூரில் நிறுவப்பட்டுள்ள சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெறும்.
தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவு நாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூச திருவிழா. இந்த ஆண்டு தைப்பூசம் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தில் பல சிறப்புகள் இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும்.
கண்ணாடிக்கு முன்னால் உள்ள ஏழு வண்ண திரைகள் நீக்கப்பட்டு நிலை கண்ணாடிக்கு பின் உள்ள ஜோதியை தரிசிப்பதே ஜோதி தரிசனம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த ஆண்டு 152வது ஆண்டாக ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது என்றும் பிப்ரவரி மூன்றாம் தேதி வரை திருவருட்பா பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறும் என்றும் பிப்ரவரி 5ஆம் தேதி ஜோதி தரிசனம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. சபையின் தெற்கு வாசல் வழியாக உள்ளே சென்றால் வலதுபுறம் பொற்சபையும், இடதுபுறம் சிற்சபையும் உள்ளது.
தைப்பூச ஜோதி தரிசன விழா கடந்த வாரம் தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் வருகிற 4ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு அகவல் பாராயணம், 7.30 மணி அளவில் வடலூர் தருமச்சாலை, வள்ளலார் பிறந்த மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கை எரிய செய்த கருங்குழி ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது.
வரும் 5ஆம் தேதியன்று கண்ணாடிக்கு முன்னால் உள்ள ஏழு வண்ண திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும். இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். மேலும் பக்தர்கள் அனைவரும் அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை' என்று முழக்கமிட்டு பக்தியுடன் வழிபடுவார்கள்.
வடலூர் ஜோதி தரிசனத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டாஸ்மாக் கடைகளும் பார்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிப்ரவரி 5ம் தேதி அன்று மதுவிற்பனை செய்ய தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.