பிரபலங்கள் பகிர்ந்த பிராங்க் வீடியோ...இந்த நேரத்தில் இது தேவைதான்
சென்னை: பிரபலங்கள் பலர் டுவிட்டரில் பிராங்க் வீடியோ ஒன்றை பகிர்ந்து வருகிறார்கள்.
Recommended Video
பசியின் கொடுமையையும் மனிதநேயத்தின் அருமையையும் அழகாக விளக்கி உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பட்டினியால் இறப்புகள் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்த மாதிரி ஒரு அருமையான தகவல் தேவைதான் என்று பலர் கூறிவருகின்றனர்.

வைரலாகும் பிராங்க் வீடியோ
தனியார் யூடியூப் சேனல் எடுத்துள்ள வீடியோ பிராங்க் வீடியோவாக இருந்தாலும், அந்த வீடியோ எடுக்கப்பட்டதின் நோக்கமும்,கருத்தும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அதனை ராதிகா சரத்குமார், விக்னேஷ் சிவன், எஸ். ஜே சூர்யா, கஸ்தூரி, தொடங்கி பல பிரபலங்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர். எல்லோரிடமும் எப்போதும் இருக்க வேண்டியது ஆனால் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கிறது அது பணம் மட்டும் அல்ல பாசமும் தான்."குழந்தையும் தெய்வமும் ஒன்று" என்று முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை.. என்று இந்த வீடியோவில் உள்ள சிறுவனின் செயல் உணர்த்தியுள்ளது. போற்றப்பட வேண்டியது அந்த சிறுவனின் செயல் மட்டுமல்ல இந்த சிறு வயதிலேயே இவ்வளவு முதிர்ச்சியான பண்புகளுடன் அவனை வளர்த்துள்ள அந்த சிறுவனின் பெற்றோர்களும் தான்.

முதுமையிலும் உழைப்பு
அந்த வீடியோவில் சாலையோரம் காய்கறிகளை வியாபாரம் செய்யும் ஒரு வயதான பெண்மணி வியாபாரத்தின் இடையே தன் உணவை உண்பதற்காக வயது மூப்பின் காரணமாக தள்ளாத, நடுங்கிய உடலுடன் அருகில் இருக்கும் இடத்திற்கு அமர செல்கிறார். அப்போது எதிர்பாராவிதமாக தன் கையிலிருந்த உணவை கை தவறி கீழே கொட்டி விடுகிறார். அந்த வழியாக சென்ற மக்கள் அனைவரும் இதை ஒரு பொருட்டாகவே கருதாமல் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு சாதாரணமாக அங்கும் இங்கும் கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

சிறுவனின் செயல்
வயதான பெண்மணி உணவை கையிலிருந்து தவற விடுவதைப் பார்த்த சாலையின் எதிர்த்திசையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் மெதுவாக சாலையைக் கடந்து வந்து அந்த பெண்மணியின் நிலையைக் கண்டு வருந்தி, எதைப் பற்றியும் யோசிக்காமல் தான் பள்ளிக்கு கொண்டு செல்ல வைத்திருந்த உணவை எடுத்து அந்த பெண்மணியின் கையில் கொடுத்துவிட்டு எந்தவித சலனமுமின்றி கடந்து செல்கிறான். அதைப் பெற்றுக் கொண்ட பெண்மணி அந்த சிறுவனை தன் மனதார ஆசீர்வதித்து வாழ்த்துவது போல் வீடியோ முடிகிறது.

சமுதாயத்தில் ஏற்பட வேண்டிய மாற்றம்
நேற்று விழுப்புரம் அருகே பசிக் கொடுமையின் காரணமாக 5 வயது சிறுவன் தள்ளுவண்டியில் இறந்து கிடந்துள்ளான். இந்த சமயத்தில் இந்த வீடியோவில் உள்ள கருத்தின் முக்கியத்துவத்தை கருதியே பிரபலங்கள் பலர் தங்கள் சமூக வலைதளங்களில் இதை ஷேர் செய்து தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.பசி என்பது சிறியவர் தொடங்கி பெரியவர் வரை, ஏழை முதல் பணக்காரர் வரை அனைவருக்கும் ஒன்றுதான். பகுத்து உண்ணா விட்டாலும் பரவாயில்லை பார்க்க வைத்துவிட்டு உண்ண வேண்டாம் என்றும், பசித்தோருக்கும், இயலாதோருக்கும் உணவளிப்பது அந்த இறைவனுக்கு நேரடியாக செய்யும் தொண்டு என்றும்,அன்பு, கருணை, இரக்கம், மனிதாபிமானம் இந்த குணங்களை ஒவ்வொருவரும் பின்பற்றி நம்மை சார்ந்தோரையும் பின்பற்ற வலியுறுத்துவோம் என்று பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications