தீபாவளி நாளில் நண்பனை நினைத்து கண்ணீர் விட்டு கலங்கிய ஜிபி முத்து... நட்புனா இதுதான்..!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஜி பி முத்து தன்னுடைய குழந்தைகளோடு தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்.
மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கும்போது தன்னுடைய நண்பனை நினைத்து உருக்கமாக ஜிபி முத்து பேசியதை பார்த்து ரசிகர்கள் பலரும் பீல் பண்ணி வருகிறார்கள்.
அருகில் இருக்கும் போது மட்டும் தான் பாசம் காட்டும் ஒரு சிலர் இருக்கையில் இந்த உலகத்தை விட்டு சென்ற நண்பனுக்காக ஜி பி முத்துவின் பாசத்தை பார்த்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
உருவான ரசிகர்கள் கூட்டம்
பலருடைய வாழ்க்கையே மாற்றிய டிக் டாக் செயலியின் மூலமாக பலருக்கும் பிரபலமான ஜி பி முத்து அந்த செயலி தடை செய்யப்பட்ட பிறகு ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க யூட்யூப் மூலமாக தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஒரு சில நெட்டிஸ்கள் இவரை கலாய்த்து வந்தாலும் இவர் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்களை திட்டி வீடியோ அனுப்பி அதே அவருக்கு பாப்புலராக மாறிவிட்டது. என்னதான் இவரை பற்றி எத்தனை பேர் நெகட்டிவ் கருத்துக்களை அசிங்கமாக பேசினாலும் இவர் அப்படியே ஒரு வீடியோவாக வெளியிட்டு இவருக்காக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வெளியே உருவாக்கி விட்டார்.
பிக் பாஸில் இருந்து வெளியேற்றம்
டிக் டாக் பிரபலமாக இருந்த இவர் யூட்யூப் மூலமாக வாழ்க்கையில் உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இவர் இப்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் .இந்த நிலையில் தான் இவருக்கு இருக்கும் ரசிகர்களின் பலத்தை பார்த்த விஜய் டிவி இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறக்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 நாட்கள் கூட இருக்க முடியவில்லை என்று தன்னுடைய குடும்பத்தை நினைத்து நினைத்து பீல் பண்ணிக்கொண்டு மன அழுத்தத்தால் இருந்த ஜி பி முத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டார்.
நண்பர் எடுத்த தவறான முடிவு
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஜிபி முத்து குழந்தைகளோடு தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். அப்போது தன்னுடைய உயிர் நண்பனை குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார். அவருடைய நண்பர் செல்வகுமார் ஒரு சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அதை குறித்து அவர் ஏற்கனவே கண்ணீரோடு கதறி அழுதபடி வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். அப்போது அந்த வீடியோக்கள் அதிகளவில் வைரலாக பரவி வந்தது. ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். அதற்குப் பிறகும் பல நேரங்களில் தன்னுடைய நண்பனை குறித்து ஜி பி முத்து உருக்கமாக பேசிக் கொண்டிருப்பார்.
நண்பனை குறித்து உருக்கம்
தற்போது தன்னுடைய நண்பரின் புகைப்படத்தை வீட்டில் மாட்டி அவரை தெய்வமாக வழிபட்டு வரும் நிலையில், தீபாவளி நாளில் அவர் இல்லாத வருத்தத்தை குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார். போன வருடம் என் நண்பன் என் கூடவே இருந்தான். இந்த வருடம் போட்டோவாக மாறிவிட்டான். அவன் இருந்தால் எப்படியோ இருக்கும் நான் இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் முழுக்க அவன் மட்டும்தான். அவன் ரொம்பவே நல்லவன், அவனைப் போல வேறு யாராலும் இருக்க முடியாது என்று உருக்கமாக பேசியிருக்கிறார். என் சிங்கம் மட்டும் இருந்தால் போதும் எனக்கு.... என்று உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருக்கும் ஜி பி முத்து, நான் என்ன புகழ் அடைந்தாலும் அதற்கு முழுக்க இவனை தான் சாரும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
நட்புனா இதுதான்
என் நண்பன் ஒரு சுத்தமான தங்கம் அவரைப்போல வேறு யாராலும் முடியாது. கடந்த வருடம் எங்களுக்கு துணி எல்லாமே அவன் தான் வாங்கி தந்தான், என்று தழுதழுத்த குரலில் பேசி இருக்கிறார் .ஜி பி முத்து இந்த வீடியோவை வெளியிட்ட ஒரு சில நிமிடங்களுக்குள் ரசிகர்கள் பலர் நட்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். நமக்கு பிடித்தவர்கள் நம் கூட இல்லை என்றாலும் அவர்களை ஒவ்வொரு நிமிடமும் நினைத்துக்கொண்டு இருக்கும் ஒரு நபரை சம்பாதித்து விட்டதே பெருசு என்று கூறி வருகிறார்கள்.