பெண்கள் வருகை எதிரொலி... சபரிமலையில் ஜன.-5-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வர முயற்சிபதால் ஏற்படும் போராட்டம் எதிரொலியாக ஜன.-5-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கேரளாவில் வெடித்தது போராட்டம். தொடர்ந்து, பல்வேறு வடிவங்களில் போராட்டம் உருவெடுத்து வருகிறது.
சபரிமலையை அயோத்தியைப் போல் ஆவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதனால், மோதல் முற்றியது.
பக்தர்கள் கூட்டம் குறைவு
சபரிமலை கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறந்த கடந்த மாதம் 16-ந்தேதி முதல் போலீசாரின் கெடுபிடியால் பக்தர்களின் கூட்டம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை 7 வது முறையாக நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனைவரும் சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
திருநங்கைகள் தரிசனம்
இதற்கிடையே, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கோயில் தந்திரிகள் மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தாரிடம் போலீசார் நடத்திய ஆலோசனைக்கு பிறகு திருநங்கைகள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சலசலப்பு
பெண்கள் உரிமை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னையைச் சேர்ந்த மனிதி என்ற பெண்கள் அமைப்பு, கடந்த வாரம் இளம்பெண்களுடன் ஒரு குழுவாக சபரிமலைக்கு தரிசனம் செய்ய சென்றது. அப்போது அவர்களை பம்பையில் தடுத்து நிறுத்திய பக்தர்கள் சபரிமலைக்கு செல்லவிடாமல் தடுத்தனர். இதில், கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் அடிவாரம் வந்த பெண்கள் சொந்த ஊர் திரும்பினர். இதே போல், கேரளாவைச் சேர்ந்த இருபெண்கள் அடுத்தடுத்த நாட்களில் சபரிமலைக்கு செல்வதாக கூறி, தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டங்களை தொடர்ந்து, அவர்களையும் போலீசார் பாதுகாப்புடன் ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
144 தடை நீட்டிப்பு
சபரிமலை ஜோதியை காண ஏராளமான ஆண் பக்தர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். இதற்கிடையே, சபரிமலைக்கு செல்வோம் என்று பெண்கள் சிலர் அடிக்கடி கூறி வருவதால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதனையடுத்து, அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க 144 தடை உத்தரவு வருகிற 5 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.