முல்லைப் பெரியாறு மரங்கள்:முதல்வர் ஸ்டாலின் பற்ற வைத்த நெருப்பால் ஜெகஜோதியாய் எரியும் கேரளா அரசியல்!
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு பேபி அணையில் மரங்கள் வெட்டும் விவகாரம் இன்று கேரளா சட்டசபையில் பெரும் பிரளயமாக வெடித்தது. கேரளா எதிர்க்கட்சி தலைவர்கள் ஆளும் இடதுசாரி அரசை மிக கடுமையாக விமர்சித்தனர்.
பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரளா அனுமதிக்க வேண்டும் என்பது 2015-ம் ஆண்டு முதல் தமிழகம் முன்வைக்கும் கோரிக்கை. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஸ்டாலின் கடிதம்
இந்த வழக்கு விசாரணையின் போது பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது என்பது கேரளாவின் வாதம். இந்நிலையில் அண்மையில் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் பேபி அணையில் மரங்களை வெட்ட அனுமதித்ததற்கு நன்றி என கூறியிருந்தார்.

சட்டசபையில் விவாதம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த கடிதம்தான் இப்போது கேரளா அரசியலை உலுக்கி எடுத்து வருகிறது. கேரளா சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் இது ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பேபி அணையில் மரங்களை வெட்ட தமிழகத்துக்கு அனுமதி கொடுத்தது தொடர்பாக அதில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் சசீந்தரன், அதிகாரிகள் எடுத்த முடிவு எங்களுக்கு தெரியவில்லை. எங்களுக்கு தெரியவந்தவுடன் நடவடிக்கை எடுத்தோம் என்றார்.

அமைச்சர் பதவி எதற்கு?
ஆனால் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு வரும் 11-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. 6 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள கோரிக்கைக்கு திடீரென அனுமதி கொடுத்ததில் ஏதோ மர்மம் உள்ளது என்றார். எதிர்க்கட்சித் தலைவரான வி.டி.சதீஷன் பேசுகையில், கேரளா அதிகாரிகளின் முடிவுகள், முதல்வருக்கும் அமைச்சருக்கும் கூட தெரியவில்லை. ஆனால் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்துள்ளது. உங்களுக்கு கீழே உள்ள அதிகாரிகள் எடுத்த முடிவு உங்களுக்கே தெரியாது என்றால் ஏன் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றார். மேலும் கேரளா அரசு அதிகாரிகள் கேரளாவின் நலன்களுக்கு எதிராக செயல்படுகின்றனரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் கேரளா அரசின் நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பும் செய்தன.

தமிழகத்துக்கு ஆதரவாக கேரளா அதிகாரிகள்
முன்னதாக மரங்களை வெட்டுவதற்கு தமிழகத்துக்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில்தான் தமிழகத்துக்கு மரங்களை வெட்ட அனுமதி கொடுத்தோம் என்று கேரளா வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். கேரளா அரசு அதிகாரிகளே, தமிழகத்துக்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆனால் தமிழக அரசியல்வாதிகள் இதனை புரிந்து கொள்ளாமல் தமிழக அரசையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து வருகின்றனர். உண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்ற வைத்த பெருநெருப்புதான் இப்போது கேரளா அரசியல் ஜெகஜோதியாய் பற்றி எரிகிறது என்பதையே சட்டசபை விவாதங்கள் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.












Click it and Unblock the Notifications