மீண்டும் தர்மடமத்தில் களமிறங்கும் பினராயி விஜயன்.. பட்டியலில் 33 எம்எல்ஏகள் இல்லை.. காரணம் இதுதான்
திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கேரளாவில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தர்மடம் தொகுதியிலிருந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடுகிறார்.
கேரள சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டைப் போலவே வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மே 2ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியோர் கேரளாவில் முக்கிய கட்சிகளாக உள்ளனர். பாஜகவும் கேரளாவில் காலூன்ற முயல்கிறது.
தொகுதிப் பங்கீடு
இடதுசாரிகள் கூட்டணியில் ஏற்கனவே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்டது. 140 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 85 இடங்களில் போட்டியிடுகிறது. அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25 இடங்களில் போட்டியிடுகிறது. இது தவிரக் கேரள காங்கிரஸ் உள்ளிட்ட 10 கூட்டணிக் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வேட்பாளர் பட்டியல் வெளியீடு
இந்நிலையில், கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 74 வேட்பாளர்கள் பட்டியிலும் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கும் ஒன்பது சுயேச்சைகள் உள்பட 83 வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள 12 பேர் பெண்கள். மேலும், 13 பேர் மாணவரணி மற்றும் இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மடத்தில் பினராயி விஜயன்
இதில் தர்மடம் சட்டப்பேரவை தொகுதியிலிருந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பினராயி விஜயன் தோற்கடித்திருந்தார். சுகாதார துறை அமைச்சர் கே.கே.சைலாஜா மட்டனூர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். அதேபோல கேரளா மாநில உயர்கல்வி துறை அமைச்சர் கே.டி.ஜலீல் தவனூரிலிருந்தும் நிதியமைச்சர் ஐசக் தாமஸ் புதுப்பள்ளி தொகுதியிலிருந்தும் போட்டியிடுகின்றனர்.
வாய்ப்பு இல்லை
கம்யூனிஸ்ட் கட்சியின் விதிகளின்படி ஒருவர் இரண்டு முறை எம்எல்ஏவாக இருக்கும் ஒரு நபர், அதற்கு மேல் சட்டசபைக்குப் போட்டியிட முடியாது. இதன் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சியின் பல முக்கிய தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த விதியின் காரணமாக ஐந்து அமைச்சர்கள் உட்பட 33 உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.