காங்கிரஸை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியை குறிவைக்கும் அமலாக்கத்துறை - மூத்த தலைவருக்கு சம்மன்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான தாமஸ் ஐசக் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இவர் நிதியமைச்சராக இருந்த போது KIIFB எனப்படும் மாநில உட்கட்டமைப்பு முதலீடு வாரியத்தில் சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள், நிதிமுறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறி அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கைதான் சட்ட ரீதியில் எதிர்கொள்வேன் என்று ஐசக் கூறியுள்ளார். ஏற்கெனவே தங்க கடத்தல் வழக்கில் கேரள ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது அமலாக்கத்துறை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சட்டவிரோத நிதி பரிவர்த்தனை
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. 2021ம் ஆண்டுக்கு பின்னர் இரண்டாவது முறையாக தற்போது இக்கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2016-2021 ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த கட்சியின் மூத்த தலைவர் தாமஸ் ஐசக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. அதாவது இவர் அமைச்சராக பணியாற்றி காலத்தில் மாநில உட்கட்டமைப்பு முதலீடு வாரியத்தில் (KIIFB) சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள், நிதிமுறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக தொடர் புகார்கள் மேலெழுந்தன.

சம்மன்
இந்த புகார்கள் காங்கிரஸ் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்கள் இந்த அமைப்பின் மூலம் நடைபெறும் நிலையில், ரூ.50,000 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு இந்த அமைப்பு ரூ.2,150 கோடி நிதி திரட்டியுள்ளது. அதில் பெரும் அளவில் விதிமீறல்கள் நடைபெற்று நிதி முறைகேடு ஏற்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை, சிஏஜி அறிக்கைகள் குற்றம் சாட்டி விசாரித்து வருகின்றன. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக தற்போது தாமஸ் ஐசக் வரும் 11ஆம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை வலியுறுத்தியுள்ளது. அதற்காக சம்மனையும் அனுப்பியுள்ளது.

புதிய சர்ச்சை
கேரளாவில் ஏற்கெனவே தங்க கடத்தல் வழக்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் பினராயி விஜயன் உள்ளிட்ட பெரும் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் மேலெழுந்தன. ஆனால் இதனை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரங்களையும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே பெரும் பூதாகரமாக எழுந்த இந்த பிரச்னை தற்போது எதுவுமில்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் தற்போது தாமஸ் ஐசக் விஷயம் மேலெழுந்துள்ளது.

கைது
ஆனால் இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மத்திய பாஜக அரசு மீது தாமஸ் ஐசக் விமர்சனம் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை மத்திய பாஜக எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஏவி வருகிறது என்றும் நான் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன். எனக்கு அதைவிட வேறு முக்கிய வேலைகள் உள்ளன. தேவைப்பட்டால் அவர்கள் என்னை கைது செய்து விசாரிக்கட்டும் என்றும் தாமஸ் ஐசக் கூறியுள்ளார். அதேபோல கடந்த 3 ஆண்டுகளில், ரிசர்வ் வங்கியின் மசாலா பத்திரங்கள் வெளியீட்டின் சட்டப்பூர்வமான தன்மையை அவர்கள் ஒருமுறை கூட கேள்வி எழுப்பவில்லை என்றும் மத்திய அரசை தாமஸ் சாடியுள்ளார்.

தொடர் நடவடிக்கை
மசாலா பத்திரம் என்பது, இந்திய நிறுவனங்களால் இந்தியாவிற்கு வெளியே வழங்கப்படும் ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் ஆகும். அவை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து உள்ளூர் நாணயத்தில் பணம் திரட்ட உதவும் கடன் கருவிகள். இந்த பத்திரத்தை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் வெளியிடலாம். இதை சுட்டிக்காட்டிய ஐசக், இது மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை என்றும் சாடியுள்ளார். ஏற்கெனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியை கைமாற்ற அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இதனையடுத்து காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணையை நடத்தியது.

அடுத்தடுத்த நடவடிக்கைகள்
தற்போது மகாராஷ்டிராவின் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அடுத்து அவரது மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக மேற்கு வங்க மாநிலத்திலும் பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது இதன் தொடர்ச்சியா கேரளாவிலும் அமலாக்கத்துறை புதிய வழக்குகளை பதிந்துள்ளது பல்வேறு கேள்விகளை மத்திய அரசு மீது எழுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications