EXCLUSIVE: இங்கிருந்த 100 கணக்கான வீடுகளை காணோம் சார்! அதிகாலையில் என்ன நடந்தது? நேரடி சாட்சியம்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே உலுக்கி உள்ளது. இதுவரை இந்த நிலச்சரிவில் 50 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 1000 கணக்கானோர் உள்ளே சிக்கி உள்ளனர். இது தொடர்பாக வயநாட்டில் வசிக்கும் மக்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் நம்மிடம் அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை அளித்தனர்.
கனமழை காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல் இன்று மீண்டும் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிக வீடுகள் உள்ள பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பலர் பலியாகி இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர்..

கிட்டத்தட்ட 400 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளன. இன்று அதிகாலை மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர். ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்ததை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது. 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
400 குடும்பங்கள் கணக்கு வைத்து.. கிட்டத்தட்ட 1000 பேருக்கும் அதிகமானோரை இதுவரை அங்கே காணவில்லை.
அதிர்ச்சி தரும் தகவல்கள்: இது தொடர்பாக வயநாடு சுல்தான் பத்தேரி பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் நம்மிடம் பேசுகையில், சுல்தான் பத்தேரி ஹெலிபேட் அருகில்தான் கேம்ப் வைத்து இருக்கிறார்கள். மற்றபடி மண் சரிவு ஏற்பட்டது எல்லாம் மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா வட்டாரத்தில்தான் சரிவு ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த 2 -3 நாட்களாவே நல்ல மழை. அப்பவே சின்ன சின்னதாக மணல் சரிவுலாம் இருந்தது சார். இப்போது திடீரென பெரிய சரிவு ஏற்பட்டு உள்ளது. ஒரு 1000 பேர் காணலை.. நாங்க நேரடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கோம். ஒவ்வொரு பஞ்சாயத்தில் இருந்தும் பல நூறு பேரு மீட்க போய் இருக்காங்க.
அங்க இருந்த பல வீடுகளை காணோம். மண்ணுக்குள்ள அப்படியே மூழ்கிடுச்சு. இருந்த இடமே தெரியாமல் போயிடுச்சு சார். மீட்க ரொம்ப நேரம் ஆகும். அடுத்த 2-3 நாள் ஆகும்.. உள்ளே போன எல்லாரையும் கொண்டு வர. அதிகாலை 1 மணிக்கு ஒரு டைம்.,. 4 மணிக்கு ஒரு டைம்னு ரெண்டு டைம் மண்ணு விழுந்து இருக்கு. முதல் சரிவில் சிக்குனவங்களை மீட்க போனவர்களும் மாட்டி இருக்காங்க.
2-3 வருஷம் முன்னாடி இதே மாதிரி சரிவு ஏற்பட்டுச்சு. அப்போ ஏற்பட்டதை விட இது மோசமான சரிவு. ரெண்டு டைம் சரிஞ்சு இடத்துல மறுபடியும் வீடுலாம் கட்ட முடியாது.. மண்ணு நிக்காது. ஆனா இங்கே மறுபடியும் சரிஞ்சு இடத்துலே கல்லை கொட்டி வீடு கட்டி இருக்காங்க. அதான் மறுபடியும் சரிஞ்சு இருக்கு. மீட்பு பணியில் பல ஆயிரம் பேர் இருந்தாலும் மழை நிக்கணும்.. சேறு இடம் கொடுக்கணும்.. அப்போதான் உடம்பை எடுக்க முடியும் சார்.. என்று நம்மிடம் தெரிவித்துள்ளனர்.
விடாத மழை: தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக மும்பை, கேரளா ஆகிய இடங்களில் அதிகமாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மஹாராஷ்டிராவில் மும்பை உட்பட பல நகரங்கள் நீரில் மூழ்கிவிட்டது.
அதேபோல் கர்நாடகாவிலும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கும் இதனால் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக மிக கனமழை பெய்து வருகிறது. வயநாடு, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பாலக்காடு, திரிச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications