ரூ3.5 கோடி ஹவலா பணம் கொள்ளை.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்.. கேரள பாஜக தலைவர் மகனிடம் விசாரணை
திருவனந்தபுரம்: கேரள சட்டசபைத் தேர்தலுக்கு சில நாட்கள் முன் திருச்சூர் நெடுஞ்சாலையில் ஹவாலா பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரனின் மகனிடம் கேரள போலீசார் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகக் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு மறுநாள் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சமீர் சம்சுதீன் என்பவர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி திருச்சூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது தன்னிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரிய நபர்கள் கொள்ளையடித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
கேரளா: ஹவாலா பணத்தை பாஜக தலைவர்கள் கொள்ளையடித்த விவகாரத்தில் சிக்கும் பெருந்தலைகள்?
ஹவலா பணம் கொள்ளை
இது தொடர்பான விசாரணையைக் கேரள போலீசார் தீவிரப்படுத்தினர். அப்போது சமீரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் தர்மராஜன் என்பவருடையது என்பது தெரியவந்தது. போலீசஸ் விசாரணையில் சமீரிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடித்தாக தீபக் உள்ளிட்ட 21 கைது செய்யப்பட்டனர். ஆனால், விஷயம் என்னவென்றால் மொத்தம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ 25 லட்சம் இல்லை சுமார் ரூ 3.5 கோடி. மேலும், போலீசார் விசாரணையில் இது ஹவாலா பணமாக இருக்கலாம் என்றும் சந்தேகித்தனர்.
பாஜக தலைவரின் மகன்
ஹவாலா பணம் என்பதால் சமீர் மற்றும் தர்மராஜன் ஆகியோரும் விசாரணை வளையத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். இந்நிலையில், இது தொடர்பாகக் கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரனின் மகன் ஹரிகிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக வழக்கை விசாரணை செய்து வரும் அதிகாரி அக்பர் தெரிவித்தார். பணம் கொள்ளையடிக்கப்பட்ட ஏப்ரல் 3ஆம் தேதி தர்மராஜனை ஹரிகிருஷ்ணா பல முறை தொடர்பு கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பெரும் பரபரப்பு
இது மட்டுமின்றி வரும் காலத்தில் பல்வேறு பாஜக தலைவர்களிடமும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது இந்தக் கொள்ளை சம்பவத்தில் பாஜக தலைவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் எனக் கேரள போலீசார் சந்தேகிக்கின்றனர். இது கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மறுப்பு
இந்நிலையில், மத்திய அமைச்சர் வி முரளீதரன், கேரளா பாஜக தலைவர்கள் சுரேந்திரன், பி கே கிருஷ்ணதாஸ் ஆகியோர் செய்தியாளரைச் சந்தித்தனர். கேரள பாஜக தலைவரைக் குறிவைத்துள்ளனர். அவரது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயல்கின்றனர், ஆனால், கட்சி அதை ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும். சிபிஐ எம்எல்ஏ ஒருவரது சிருங்கமான தொடர்பில் இருக்கும் ஒருவருக்கு இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு உள்ளது.
பாஜகவை பார்த்து அச்சம்
தர்மராஜன் என்ற தொழிலதிபரின் பணம் ஏப்ரல் 3ஆம் தேதி கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் புகாரும் அளித்துள்ளார். கொள்ளையர்களைப் பிடிப்பதற்குப் பதிலாக, போலீசார் புகார் அளித்தவரையும் ஆர்எஸ்எஸ்- பாஜக தலைவர்களையும் எப்படி தொடர்புபடுத்தலாம் என்று விசாரணை செய்து வருகின்றனர். சட்டசபைத் தேர்தலில் பாஜக ஒரு இடத்திலும் வெல்லாத போதும், அனைத்து தொகுதிகளிலும் பாஜகவின் வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. இது ஆளும் கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது" என்று தெரிவித்தனர்.