லாட்டரியே வாங்கல.. ஆனாலும் 1 கோடி பரிசு வென்ற கேரளா பஸ் கண்டக்டர்.. கடைக்காரரின் வேற லெவல் சம்பவம்
திருவனந்தபுரம்: கேரளாவில் லாட்டரி டிக்கெட் (Kerala Lottery ticket) கூட வாங்க காசு இன்றி, டிக்கெட்டை எடுத்து வைக்குமாறு கூறி சென்ற பஸ் டிரைவர் ஒருவருக்கு முதல் பரிசாக ரூ.1 கோடி அடித்துள்ளது. லாட்டரிக்கு காசு கொடுக்காத போதும் கூட கடை உரிமையாளர் பரிசுத்தொகை ரூ.1 கோடியை அந்த டிரைவரை தேடிப்பிடித்து கொடுத்து இருக்கிறார். கேரளாவில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து பார்க்கலாம்.
கேரளாவில் 50 ரூபாய் விலை கொண்ட லாட்டரி டிக்கெட்டை வாங்குவதற்கு பணம் இல்லாததால், நம்பரை மட்டும் பார்த்து வைத்துவிட்டு, "டிக்கெட்டை எடுத்து வைங்க பிறகு காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்" என்று பஸ் கண்டக்டர் ஒருவர் கடை உரிமையாளரிடம் சொல்லிவிட்டு சென்றார்.

கடவுளாக மாறிய கடைக்காரர்
இந்த நிலையில் அந்த நம்பருக்கு முதல் பரிசு ரூ.1 கோடி பரிசு அடித்துள்ளது. லாட்டரி டிக்கெட்டுக்கு காசு கொடுக்காத நிலையிலும், பஸ் கண்டக்டரை தேடிப் பிடித்து கடைக்காரர் டிக்கெட்டை ஒப்படைத்ததோடு முதல் பரிசுத் தொகையை பெற கடவுள் போல உதவியிருக்கிறார். இந்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
கேரளாவில் தினசரி லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. இதற்கு முதல் பரிசாக ரூ.1 கோடி அளீக்கப்படுகிறது. வாழ்க்கையில் ஒருநாளாவது அதிர்ஷ்ட காற்று நம் பக்கம் திரும்பிவிடாதா என்ற ஆர்வத்தில் கேரள சேட்டன்களும், லாட்டரி பிரியர்களும் லாட்டரி டிக்கெட்டை வாங்குவதை பார்க்க முடியும். லாட்டரி டிக்கெட்டுகளை பொறுத்தவரை வாங்கிய பல லட்சம் பேருக்கு ஏமாற்றமே மிஞ்சினாலும் ஒரு சிலருக்கு கோடிக்கணக்கில் பணம் அடித்து வாழ்க்கையில் கற்பனை செய்து பார்க்க முடியாத திருப்பத்தை கொடுத்துவிடுகிறது.
இந்த டிக்கெட்டை வைங்க
சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. கேரளாவில் கடந்த புதன்கிழமை தனலட்சுமி லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடைபெற்றது. இதற்கு முதல் பரிசாக ரூ.1 கோடி கேரளாவில் தனியார் பஸ் கண்டக்டர் ஒருவருக்கு அடித்துள்ளது. ஆனால், இந்த லாட்டரிக்காக ஒரு ரூபாயை கூட அவர் செலவு செய்யவில்லை. அதாவது, திங்கள் கிழமை லாட்டரி டிக்கெட்டை வாங்கிய பஸ் கண்டக்டர் ஜெயேஷ், பணம் இல்லாததால், "இந்த டிக்கெட்டை வைங்க.. காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்" என கடைக்காரரிடமே கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து அந்த டிக்கெட்டை வேறு யாருக்கும் விற்காமல் தனியாக எடுத்து வைத்து இருக்கிறார் லாட்டரி கடை ஓனர் ஆரொஷ் கிரன். கலேபேட்டா பேருந்து நிலையம் அருகே அம்மா லாட்டரி ஏஜென்சி என்ற பெயரில் கடை நடத்தி வரும் ஆரோஷ் கிரனுக்கு குலுக்கல் முடிந்த சில மணி நேரத்தில் ஏஜென்சியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து தனது கடையில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு பரிசு அடித்தது தெரியவந்துள்ளது.
யாரோ கலாய்க்கிறார்கள் என நினைத்தேன்
உடனே கடை ஊழியர்களிடம் சொல்லி கண்டக்டர் ஜெயேஷ்க்கு போன் செய்ய சொல்லியிருக்கிறார். ஆனால் ஜெயேஷொ யாரோ கலாய்க்கிறார்கள் என்று அலட்சியம் செய்தாராம். பிறகு நிலவரத்தை எடுத்து சொன்ன பிறகுதான் ஜெயேஷ்க்கு உண்மை தெரியவந்துள்ளது. காசு இல்லாமல் வாங்காமல் விட்டு சென்ற லாட்டரிக்கு ரூ.1 கோடி பரிசு அடித்ததால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார் ஜெயேஷ். இது குறித்து லாட்டரி கடை ஓனர் ஆரோஷ் கூறியதாவது:-
டிக்கெட்டை எடுத்து வைத்ததை நானும் மறந்துவிட்டேன். லாட்டரி அலுவலகத்தில் இருந்து எனக்கு அதிகாரிகள் போன் செய்தனர். DA 807900- என்ற என்ணிற்கு முதல் பரிசு அடித்துள்ளது. என்று தெரிவித்தனர். அதன்பிறகுதான் லாட்டரியை தேடிய போது, பஸ் கண்டக்டர் வாங்காமல் விட்டுசென்ற டிக்கெட் என்பது தெரியவந்தது. காசு கொடுக்காவிட்டாலும் அந்த டிக்கெட் அவர் எடுத்தது.
கடை உரிமையாளருக்கு பாராட்டு
எனவே, பரிசுத்தொகை அவருக்கு சேர வேண்டியதுதான். ஆகவே அவரை அழைத்து பரிசுத்தொகையை கொடுத்துவிட்டேன்" என்றார். பணம் கொடுக்காமல் இருந்தாலும் கூட பரிசுத்தொகையை தேடிப்பிடித்து ஒப்படைத்த ஆரோஷின் நேர்மையை கேரள மக்கள் பாராட்டி வருகிறார்கள். லாட்டரி வாங்க கூட காசு இல்லாமல் இருந்த ஜெயேஷ் ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
கண்டக்டர் பேட்டி
இது குறித்து அவர் கூறுகையில், "இந்த பணத்தை நான் நிலத்தில் முதலீடு செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளேன். இதற்கு முன்பாக ஒருமுறை ரூ 5 ஆயிரம் அடித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை பரிசாக அடிப்பது இதுவே முதல் முறையாகும்" என்றார். இந்த லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த ஆரொஷ்க்கு ஏஜெண்ட் கமிஷனாக ரூ.9.5 லட்சம் கிடைக்கும். ஜெயேஷ்க்கு ரூ.68 லட்சம் கையில் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications