அம்மா ஓடிபோய்ட்டாங்க.. குழந்தைகளை ஏமாற்றிய தந்தை..மனைவியை கொன்று ‛த்ரிஷ்யம்’ பாணியில் புதைப்பு-ஷாக்
திருவனந்தபுரம்: 'த்ரிஷ்யம்' திரைப்பட பாணியில் தனது மனைவியை கொன்று வீட்டு வாசலிலேயே கணவர் புதைத்து வைத்திருந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு இந்த பயங்கர கொலைச் சம்பவத்தை போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, கணவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, இந்தக் கொலை சம்பவம் வெளிவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தால் ஏற்பட்ட விபரீதம்
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் சஞ்சீவன் (38). இவருக்கும் ரம்யா (32) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 8 வயதிலும், 6 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணமான புதிதில் இருந்தே சஞ்சீவனுக்கு மனைவி ரம்யா மீது சந்தேகம் இருந்துள்ளது. வெளிநபர்கள் யாரிடமும் ரம்யா பேசக்கூடாது, செல்போன் வைத்திருக்கக் கூடாது என ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்து, அவரை மனரீதியாக டார்ச்சர் செய்து வந்துள்ளார் சஞ்சீவன்.

கொலை செய்து..
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரம்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு சஞ்சீவன் தகராறு செய்துள்ளார். அதுவரை பொறுத்து பொறுத்து போன ரம்யா, ஆவேசமாக வெகுண்டெழுந்து கணவன் சஞ்சீவனை திட்டியதாக தெரிகிறது. இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதில் சஞ்சீவன் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து ரம்யாவின் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரம்யா துடிதுடித்து இறந்துபோனார். இதையடுத்து, ரம்யாவின் உடலை வீட்டு வாசலிலேயே குழிதோண்டு புதைத்துள்ளார் சஞ்சீவன்.

அம்மா ஓடிபோயிட்டாங்க..
அதன் பின்னர் அன்று மாலை குழந்தைகள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்து அம்மாவை தேடியுள்ளன. ஆனால் அம்மா இல்லாததால் அவை அழத் தொடங்கியுள்ளன. இதனை பார்த்த சஞ்சீவன், குழந்தைகளிடம் அம்மா வேறொரு நபருடன் சென்றுவிட்டதாகவும், இனி வர மாட்டாள் எனவும் கூறினார். மேலும், அங்குள்ள காவல் நிலையத்திலும் மனைவி ரம்யா காணாமல் போய்விட்டதாக புகார் அளித்துள்ளார் சஞ்சீவன். ஆனால், சஞ்சீவன் கூறுவதை நம்ப மறுத்த ரம்யாவின் பெற்றோர் மற்றும் சகோதர்கள் சஞ்சவீன் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக போலீஸாரிடம் தெரிவித்தனர். ஆனால், போலீஸார் அவர்கள் கூறுவதை நம்பவில்லை.

உண்மையை வெளிக்கொணர்ந்த 'நரபலி'
இந்த சூழலில்தான், கேரளாவில் கடந்த அக்டோபர் மாதம் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. பெண்களை நரபலி கொடுத்ததாக சாமியாரும், ஒரு தம்பதியும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் மேலும் சில பெண்களையும் இவர்கள் நரபலி கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் மாநிலம் முழுவதும் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, காணாமல் போன பெண்களின் பட்டியலை வெளியே எடுத்து அவர்கள் குறித்த விசாரணையில் போலீஸார் இறங்கினர்.

வீட்டு வாசலிலேயே..
அப்போது ரம்யா வழக்கையும் தூசுதட்டிய போலீஸார் இதுகுறித்து விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது கணவன் சஞ்சீவனின் பேச்சில் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்கள் பாணியில் போலீஸார் விசாரித்ததில், ரம்யாவை கொலை செய்ததை சஞ்சீவன் ஒப்புக்கொண்டார். மேலும், ரம்யாவின் உடலை தனது வீட்டு வாசலிலேயே புதைத்ததாகவும் சஞ்சீவன் கூறினார். இதன்பேரில், போலீஸார் நேற்று சஞ்சீவன் வீட்டு வாசலில் புதைக்கப்பட்டிருந்த ரம்யாவின் எலும்புக்கூட்டை வெளியே எடுத்தனர். இதனைத் தொடர்ந்து, சஞ்சீவனை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications