கேரளாவில் நாளை வாக்குப் பதிவு: அரபு நாடுகளில் இருந்து ஓட்டுப் போட "பறந்து வந்த" 30,000 வாக்காளர்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே கட்டமாக 20 லோக்சபா தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. கேரளாவில் வாக்களிப்பதற்காக அரபு நாடுகளில் இருந்து 30,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.
நாட்டின் 18-வது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 2- வது கட்டமாக நாளை ஏப்ரல் 26-ந் தேதி 89 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும்.

கேரளா மாநிலத்தில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 20 தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
கேரளாவில் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த இடதுசாரித் தலைவர் ஆனிராஜா ஆகியோர் மோதுகின்றனர். திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி, பாஜக வேட்பாளராக களம் காண்கிறார். திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் போட்டியிடுகின்றனர்.
கேரளாவைப் பொறுத்தவரையில் அரபு நாடுகளில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இவர்கள் ஒவ்வொரு சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலின் போதும் வாக்களிக்க தவறாமல் வருகை தந்து ஜனநாயகக் கடமையை செய்துவிட்டு திரும்புகின்றனர். தற்போது ஒரே கட்டமாக கேரளாவில் லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் கடந்த சில வாரங்களாக அரபு நாடுகளில் இருந்து கேரளாவுக்கு திரும்புவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலையில் சுமார் 30,000 பேர் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு திரும்பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளா தேர்தல் களத்தில் சில தொகுதிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அத்தொகுதிகளில் அரபு நாடுகளின் சிக்கல், இஸ்ரேல்- காஸா மோதல், உக்ரைன் - ரஷ்யா மோதலின் போது மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் விவாதப் பொருளாகவும் இடம் பெறுவது வழக்கம்.












Click it and Unblock the Notifications