முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் - தமிழக விவசாயிகளை சீண்டும் நடிகர் பிரித்வி ராஜ்
திருவனந்தபுரம்: தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையின் உயரம் 155 அடி ஆகும். 15.5 டி.எம்.சி தண்ணீரை இதில் சேமித்து வைக்க முடியும்.
தீபாவளிக்கு முன் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது ஏன்?.. அமைச்சர் விளக்கம்!
முல்லை பெரியாறு அணை கேரள எல்லையில் இருந்தாலும் அணையின் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் நீராதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்கி வருகிறது.
முல்லை பெரியாறு அணை
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் கேரள அரசு இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கேரள அரசு கட்டுக்கதை
''முல்லை பெரியாறு அணை மிகவும் பழமையான அணை. 152 அடி வரை நீரை தேக்கி வைத்தால் அணை உடைந்து விடும். இடுக்கி உள்பட 5 மாவட்டம் முழுவதும் அழிந்து 35 லட்சம் மக்கள் உயிரிழந்து விடுவார்கள்'' என்று கேரள அரசு நீண்ட வருடமாக கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு வருகிறது. முல்லை பெரியாருக்கு பதிலாக வேறு அணையை கட்ட திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இடையூறு செய்கிறது
அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய மூவர் குழு மற்றும் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரு மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்த குழுவினர் அவ்வப்போது முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு அதன் அறிக்கையை மூவர் குழுவுக்கு அளித்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு அதிகாரிகள் அணையை பராமரிக்க சென்றால் அவர்களுக்கு இடையூறு செய்வதை கேரளா அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.
கனமழை, வெள்ளம்
தற்போது அணையின் பாதுகாப்பு கருதி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழை, வெள்ளம் எற்பட்டு வருகிறது. இடுக்கி மாவட்டத்தின் முல்லை பெரியாறு அணை நீட்டிப்பிடிப்பு பகுதிகளில் பேய் மழை கொட்டியதால் முல்லை பெரியாறு அணை 142 அடியை வேகமாக எட்டியது. இதனால் அதில் இருந்து தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
#Decommision Mullaperiyar Dam
வழக்கமாக பெருமழை காலத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்சினையை கையில் எடுக்கும் கேரளா இந்த முறையும் பிரச்சினையை கிளப்பி உள்ளது. அதாவது டுவிட்டரில் #DecommisionMullaperiyarDam என்ற ஹேஷ்டேக்கை கேரளவாசிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இதில் முல்லை பெரியாறு அணையை கைவிட வேண்டும் என்று கருத்து கூறி வருகின்றனர். இதில் பிரபல மலையாள நடிகரான பிரித்விராஜ் சர்ச்சை முல்லை பெரியாறு அணையை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரித்விராஜ் கருத்து
#DecommisionMullaperiyarDam என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு பதிவிட்ட அவர் ''உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் என்னவாக இருந்தாலும் சரி, 125 ஆண்டுகள் பழமையான இந்த அணை ஒரு செயல்பாட்டுக் கட்டமைப்பாக இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அரசியலையும் பொருளாதாரத்தையும் ஒதுக்கிவிட்டு சரியானதைச் செய்ய வேண்டிய நேரம் இது'' என்று கூறியுள்ளார். நடிகர் பிரித்விராஜ் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.