தமிழ்நாடு ஓவர்... நெக்ஸ்ட் கேரளா.. நாளுக்கு நாள் ராகுல் காந்திக்கு பெரும் மக்கள் ஆதரவு!
திருவனந்தபுரம்: இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இன்று முதல் 19 நாட்களுக்கு கேரளாவில் நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் பாரத் ஜோடோ யாத்ரா எனும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7ம் ராகுல் காந்தி தொடங்கினார்.
மொத்தம் 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, 12 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கிமீ பயணித்து காஷ்மீரில் நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்த தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு 600 மீட்டர் தூரம் நடந்து வந்த ராகுல்காந்தி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தமிழக நடைபயணம்
இரண்டாவது நாளில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து தனது நடைபயணத்தை ஆரம்பித்து, கொட்டாரம் காமராஜர் சிலை அருகில் தொடங்கி கோட்டார் வரை நடந்தார் ராகுல் காந்தி. 3-வது நாள் பாதயாத்திரையை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் தொடங்கி முளகுமூடு சந்திப்பு வரை மேற்கொண்டார். 4-வது நாளாக ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியில் இருந்து தொடர்ந்தார். தளச்சான்விளை வரையும் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, இரவு செறுவாரக்கோணத்தில் ஓய்வெடுத்தார்.

பெரியார் மண்
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, நடைபயணத்திற்கு வரவேற்பு கொடுத்த மக்களுக்கு எனது நன்றி. மக்களின் உழைப்புக்கான ஊதியம் கிடைக்கவே இந்த நடைபயணம். தமிழக மக்களிடம் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. நான் பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பி செல்கிறேன். அதேசமயம், இனி நாராயண குரு பிறந்த கேரளத்துக்குள் செல்லவிருப்பதை எண்ணி மகிழ்கிறேன். தமிழகத்தில் 4 நாட்கள் நடைபயணம் வெற்றிகரமாக அமைந்தது எனத் தெரிவித்தார்.

பிரம்மாண்ட வரவேற்பு தயார்
கேரளாவில் இன்று முதல் 19 நாட்களுக்கு 7 மாவட்டங்கள் வழியாக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். தமிழக எல்லையை ஒட்டியுள்ள பாறசாலையில் கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சுதாகரன், கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட கேரள மாநில காங்கிரஸார் நேற்றே திரண்டனர். இன்று பாறசாலையில் பிரம்மாண்ட வரவேற்புக்கு அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

கேரளா அட்டவணை
பாறசாலை - திருவனந்தபுரம் - திருச்சூர் வரை தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், திருச்சூரில் இருந்து நிலாம்பூர் வரை மாநில நெடுஞ்சாலைகள் வழியாகவும் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். இன்று முதல் 14ம் தேதி வரை திருவனந்தபுரம் மாவட்டத்திலும், 14ம் தேதி மதியம் முதல் 17ம் தேதி வரை கொல்லம் மாவட்டம், 17 முதல் 20 வரை ஆலப்புழா, 21, 22 தேதிகளில் எர்ணாகுளம், 23 முதல் 25 தேதி வரை திருச்சூர், 26, 27 தேதிகளில் பாலக்காடு, 28, 29 தேதிகளில் மலப்புரம் மாவட்டத்திலும் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.












Click it and Unblock the Notifications