அதிகார போட்டி.. குலுங்கிய திருவனந்தபுரம்.. குப்பையில் கிடந்த "கால்கள்".. பின்னணி இதுதான்!
திருவனந்தபுரம்: சமீபத்தில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் துண்டாக்கப்பட்ட நிலையில் இரண்டு கால்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில் தற்போது இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதேபோல கொலை செய்யப்பட்டவர் பிரபல ரவுடியாக இருக்கலாம் என கேரள போலீஸ் சந்தேகமடைந்துள்ளது.

கால்கள்
கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முத்தத்தாரா குப்பைக் கிடங்கில் இரண்டு கால்கள் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அம்மாநில காவல்துறை விசாரணையை தொடங்கியது. முதற்கட்டமாக சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரும், சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்கு பின்னரும் காணாமல் போனவர்களின் பட்டியலை காவல்துறை சேகரித்தது. இந்த பட்டியலில் கன்னியாகுமரியின் கேங்ஸ்டார் ஒருவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ரவுடி
பின்னர் விசாரணையை தீவிரப்படுத்தியதில் கொல்லப்பட்டவர் ரவுடியாக இருக்கலாம் என்பது ஓரளவு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வலியத்துறையைச் சேர்ந்த மனு ரமேஷ் மற்றும் ஷெஹின் ஷா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. அதன்படி இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என காவல்துறை கூறியுள்ளது. தற்போது கால்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் டிஎன்ஏ பரிசோதனையில்தான் கொலை செய்யப்பட்டது யார் என்று உறுதியாக தெரிய வரும் என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

கொலை
வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ரமேஷ் வலியத்துறையில் வசித்து வந்தாலும், அவர் கன்னியாகுமரியை சேர்ந்தவராவார். இவரது தாயார் கன்னியாகுமரியில் வசித்து வருகிறார். இவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ரவுடியும் தமிழ்நாட்டில் பல வழக்குகளில் தொடர்புடையவராவார். ஆக இப்படியாக கொலையாளி ஒரு குழுவாகவும், கொல்லப்பட்ட ரவுடி ஒரு குழுவாகவும் இயங்கி வந்துள்ளனர். இந்நிலையில், ஆகஸ்ட் 13ம் தேதி ரமேஷ் இந்த கன்னியாகுமரி ரவுடியை திருவனந்தபுரத்திற்கு வரவழைத்துள்ளார். அப்போது ரமேஷ் அவர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்துள்ளார்.

உடல்
பின்னர் ஷெஹின் ஷா உயிரிழந்த கன்னியாகுமரி ரவுடியின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளாதாக என கேரள போலீசார் கூறியுள்ளனர். மேலும், கால்களைத் தவிர இதர உடல்பாகங்களை தேடும் பணிகளையும் அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை சேர்ந்த ரவுடி ஒருவர் கேரளாவிற்கு வரவழைக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வழக்கு தொடர்பாக கூடுதல் தகவல்கள் எதையும் காவல்துறை வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications