சபரிமலை ஐயப்பன் கோயில் - ஐப்பசி மாத பூஜை - வரும் 17-ம் தேதி நடை திறப்பு!
திருவனந்தபுரம்: உலகப் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை, வரும் 17-ம் தேதி திறக்கப்படுகிறது. சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு, பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலையிட்டு, கடும் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வது வழக்கம். தை மாதம் ஒன்றாம் தேதி, பொன்னம்பல மேட்டில் காட்சி தரும் மகரஜோதியை தரிசனம் செய்வதற்காக, சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுப்பார்கள். சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும், கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஒவ்வொரு மாதமும் நடைபெறவுள்ள சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. கோவில் நடையை, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்தார். பின்னர், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கடந்த மாதம் 21ம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு பூஜையில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள், சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஐப்பசி மாத பூஜைக்காக, வரும் 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வைத்து, விளக்கேற்றி தீபாராதனை நடத்தவுள்ளார். கோயில் நடை வரும் 22-ம் தேதி வரை 5 நாட்களுக்கு திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படவுள்ளன.
ஐப்பசி மாத பூஜையைத் தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 22-ம் தேதி இரவு 10.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைனில் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்ய அனுதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கேரள அரசின் உத்தரவுக்கு இணங்க, சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து வருமாறும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications