வயநாடு தேர்தல்: மும்முனைப் போட்டி- பிரியங்கா காந்தி அக். 23-ல் குடும்பத்துடன் வேட்பு மனுத் தாக்கல்!
திருவனந்தபுரம்: வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான அக்கட்சியின் பொதுச்செயல்லாளர் பிரியங்கா காந்தி, தாயார் சோனியா, அண்ணன் ராகுல் காந்தி மற்றும் குடும்பத்தாருடன் இணைந்து நாளை மறுநாள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார். வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மோக்கேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் களம் காண்பதால் மும்முனைப் போட்டி வலுவாக உள்ளது.
வயநாடு லோக்சபா தொகுதி எம்பியாக வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. அதேநேரத்தில் உ.பி. ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு லோக்சபா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தலின் போதே வயநாடு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நிலச்சரிவியின் கோரப் பிடியில் சிக்கி மீளாததால் வயநாடு தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுடன் வயநாடு தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வயநாடு லோக்சபா தொகுதி இடைத் தேர்தல் நவம்பர் 13-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்குகிறார். பல்வேறு தேர்தல்களில் பிரசாரம் செய்துள்ள பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால் வயநாடு தொகுதி இடைத்தேர்தல் பெரும் கவனம் பெற்றுள்ளது.
வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மோக்கேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் களம் காண்கின்றனர். இதனால் வயநாடு தொகுதியில் மும்முனைப் போட்டி வலுவாக உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 6,47,445 (59.69%) வாக்குகளைப் பெற்றிருந்தார். ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனி ராஜா 2,83,023 வாக்குகளையும் பாஜக மூத்த தலைவர் சுரேந்திரன்1,41,045 வாக்குகளையும் பெற்றிருந்தார்.
பிரியங்கா காந்திக்காக ஏற்கனவே காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரியங்கா காந்தி நாளை முதல் 10 நாட்களுக்கு வயநாடு தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்ய இருக்கிறார். நாளை மறுநாள் புதன்கிழமையன்று தாயார் சோனியா காந்தி, அண்ணன் ராகுல் காந்தி ஆகியோர் புடைசூழ வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார் பிரியங்கா காந்தி.












Click it and Unblock the Notifications