யானையாலே முடியல.. சுற்றி சூழ்ந்த வெள்ளம்.. தப்பியதா, இல்லையா.. கேரள திக் திக் காட்சிகள்!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட யானை ஒன்று வெளியேற முடியாமல் போராடி தவிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை கலங்க வைத்துள்ளது.
தென்மேற்கு பருவமழையால் கேரளா முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. கொட்டி தீர்த்து வரும் கனமழையால் கேரளாவில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் அடித்துச்செல்கிறது. தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
3 கிமீ தூரம்.. கங்கையின் பெருவெள்ளத்தில் மிதந்து.. பாகனை காத்த கம்பீர யானை.. சிலிர்க்க வைத்த வீடியோ!
ரெட் அலர்ட்
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டும் அல்ல வன விலங்குகளின் இயல்பு வாழ்க்கையும் அதோ கதிதான் போல.. என்று சொல்லும் வகையில், கேரளாவின் திரிசூர் மாவட்டத்தில் ஒரு யானைக்கு சங்கடமான நிலை நேர்ந்தது. அங்குள்ள சலக்குடி ஆற்றில் கனமழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இரவு முழுவதும் பெய்த மழையால் ஆற்றில் நீர்மட்டம் 5 மீட்டர் அளவுக்கு உயர்ந்தது.
கவலையாக இருந்தது
இந்த ஆற்றின் வெள்ள நீரில் சிக்கிய காட்டு யானை ஒன்று கரையேற முடியாமல் தவிக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ''ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்ட காட்டு யானை பல மணி நேரமாக கரையேற முடியாமல் தவித்து நின்றது. ஆற்றின் நடுவே சற்று உயரமாக இருந்த மணல் திட்டில் யானை நின்றதால் வெள்ள நீரில் அடித்து செல்லாமல் இருந்தது. இருந்தாலும் இருபுறமும் ஆர்ப்பரித்து ஓடும் நீரை எப்படி கடப்பது என தெரியாமல் யானை நின்றது எங்களுக்கு கவலை அளிப்பதாக இருந்தது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே பணியில் ஈடுபட்டு இருந்த வனத்துறை காவலர்கள் யானையை மீட்க எந்த முயற்சியும் பலன் கொடுப்பது போல தெரியவில்லை.
அடித்து செல்லப்பட்ட யானை
கரையைக் கடக்க முயன்றபோது யானையை வெள்ளம் அடித்து சென்றது. சில அடி தூரத்திற்கு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கிருந்த மரக்கிளை ஒன்றை பிடித்து யானை நின்று கொண்டது. அதன்பிறகு மெல்ல மெல்ல ஆற்றின் மறுமுனைக்கு செல்ல முயற்சித்தது. பிறகு சிறிது நேரத்தில் யானை எங்களின் பார்வையில் இருந்து மறைந்து போனது. ஆற்றின் மறுகரையை நெருங்கி விட்டதால் யானை பத்திரமாக வனப்பகுதிக்குள் சென்று இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என்றனர்.
வனவிலங்குகளுக்கும் சிரமம்
யானை தனது தும்பிக்கையை கொண்டு நீர்மட்டம் எவ்வளவு உள்ளது என்பதை தொட்டு தொட்டு பார்க்கும் காட்சிகள் லோக்கல் செய்தி சேனல்களில் வெளியானது. உணவு தேடி தனது வசிப்பிடத்தை விட்டு ஆற்றை கடந்த யானை மீண்டும் தனது வசிப்பிடத்திற்கு திரும்பும் போது வெள்ள நீரில் சிக்கியிருக்கலாம் என்று அங்குள்ளவர்கள் கூறினர். கனமழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் வனவிலங்களும் எவ்வளவு சிரமத்தை எதிர்கொள்கின்றன என்பதை யானை வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் காட்டும் வகையில் உள்ளது.