கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: கரும்பு விவசாயிகளுக்கு ரூ3,500 கோடி நிதி உதவி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
- கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவி வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் தற்போது, 5 கோடி கரும்பு விவசாயிகளும், அவர்களைச் சார்ந்தவர்களும் உள்ளனர். மேலும், 5 லட்சம் தொழிலாளர்கள் கரும்பாலைகளிலும், அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். கரும்புகளை சர்க்கரை ஆலைகளில் விவசாயிகள் விற்கின்றனர். ஆனால், சர்க்கரை ஆலைகளில் கூடுதல் இருப்பு உள்ளதால், அவர்களுக்கு செலுத்த வேண்டிய பணம் நிலுவையில் வைக்கப்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, கூடுதல் சர்க்கரை இருப்பை அகற்ற மத்திய அரசு உதவி வருகிறது. இதன் மூலம், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை செலுத்த வழி ஏற்படும். இதற்காக மத்திய அரசு ரூ.3,500 கோடி செலவை ஏற்கவுள்ளது. இந்த நிதியுதவி, சர்க்கரை ஆலைகள் சார்பில், கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அதன்பின், ஏதாவது நிலுவைத் தொகை இருந்தால், அது சர்க்கரை ஆலைகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
மத்திய அரசின் இந்த முடிவு, ஐந்து கோடி கரும்பு விவசாயிகளுக்கும், அவர்களை சார்ந்து உள்ளவர்களுக்கும், சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் ஐந்து லட்சம் பணியாளர்களுக்கும் பயனளிக்கும்.

- மத்திய தொலைத் தொடர்பு துறையின் ஸ்பெக்ட்ரம்(அலைக்கற்றை) ஏலத் திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் ஏலத்தில் வெற்றி பெறும் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும். 700 , 800, 900 , 1800 , 2100 , 2300 மற்றும் 2500 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை பேண்டில் ஸ்பெக்ட்ரம் ஏலம் இருக்கும். 20 ஆண்டு காலத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும். மொத்தம் 2251.25 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை ரூ. 3,92,332.70 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது.
ஏலம் மூலம் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்துவதற்கான உரிமையை வென்று, தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க் திறனை அதிகரிக்க முடியும், அதே நேரத்தில் புதிய நிறுவனங்கள் தங்கள் சேவைகளைத் தொடங்க முடியும். ஏலத்தில், ஏலதாரர்கள் விதிமுறைகள் / நிபந்தனைகளை ஏற்க வேண்டும். ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் முழு ஏலத் தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்தலாம். அல்லது 700, 800, 900 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை ஸ்பெக்ட்ரமுக்கு 25 சதவீதம் அல்லது 1800, 2100 , 2300 2500 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமுக்கு 50 சதவீதமும் செலுத்தி, மீதத் தொகையை இரண்டு வருட கால அவகாசத்திற்குப் பிறகு, அதிகபட்சம் 16 சமமான வருடாந்திர தவணைகளில் செலுத்தலாம். ஏலத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வது வெளிப்படையான நடைமுறை. போதிய அளவு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வது, வாடிக்கையாளர்களுக்கு தரமான தொலைத் தொடர்பு சேவையை அதிகரிக்கும்.
- வடகிழக்குப் பிராந்திய மின்சார அமைப்பின் மேம்பாட்டுத் திட்டத்திற்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா ஆகிய ஆறு வடகிழக்கு மாநிலங்களில் மின்சாரப் பகிர்மானமும், விநியோகமும் வலுவடையும்.
மேற்கண்ட ஆறு மாநிலங்களுடன் இணைந்து, மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனமான பவர்கிரிட் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரூ 6,700 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், மாநிலங்களுக்குள் மின்சாரப் பகிர்மானத்தையும், விநியோக அமைப்புகளையும் வலுப்படுத்துவதன் மூலம் வடகிழக்குப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒரு முக்கிய நடவடிக்கை ஆகும்.
- இந்தியாவும், அமெரிக்காவும், மின்சாரத்துறையில் இருதரப்பு நலன் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையமும், அமெரிக்காவின் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். மொத்த விலை மின்சார சந்தையை ஊக்குவிப்பதற்காகவும், மின்சார தொகுப்பின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காகவுமான ஒழுங்குமுறை மற்றும் கொள்கைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.
கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமில்லாமல், வளர்ச்சித் திட்டங்கள், பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.












Click it and Unblock the Notifications