For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆய கலைகள் 64.. அது தெரியும்.. ஆனா என்னென்னு தெரியுமா.. வாங்க பார்க்கலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஆயக்கலைகள் 64 என்பது தெரியும். அவை என்னென்ன? அவற்றின் அர்த்தம் என்ன? எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.

பொதுவாக சினிமாக்களில் ஆயக்கலைகள் 64 -ம் எனக்கு அத்துப்படி என ஹீரோ சொல்வதை கேட்டுள்ளோம். அதற்கு சீ என ஹீரோயின் வெட்கப்படுவதையும் பார்த்துள்ளோம். இதனால் ஆயக்கலைகள் 64 என்றால் சிலர் மத்தியில் தவறான எண்ணம்தான் தோன்றியுள்ளது.

ஆனால் அது தவறு. மன்னர் ஆட்சி காலத்தில் ஆயக்கலைகள் 64 -லும் சிறந்து விளங்கும் வீரனையே மணக்க ராஜகுமாரிகள் விரும்புவார்கள். சரி அந்த கலைகள் என்ன, அவற்றின் சிறப்புகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

What is Aayakalaigal 64 ? What are they?

64 கலைகள் பின்வருமாறு:

1. ஆடல்
2. இசைக்கருவி மீட்டல்
3. ஒப்பனை செய்தல்
4. சிற்பம் வடித்தல்
5. பூத்தொடுத்தல்
6. சூதாடல்
7. சுரதம் அறிதல்
8. தேனும் கள்ளும் சேகரித்தல்
9. நரம்பு மருத்துவம்
10. சமைத்தல்
11. கனி உற்பத்தி செய்தல்
12. கல்லும் பொன்னும் பிளத்தல்
13. கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்
14. உலோகங்களில் மூலிகை கலத்தல்
15. கலவை உலோகம் பிரித்தல்
16. உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்
17. உப்பு உண்டாக்குதல்
18. வாள் எறிதல்
19. மற்போர் புரிதல்
20. அம்பு தொடுத்தல்
21. படை அணிவகுத்தல்
22. முப்படைகளை முறைப்படுத்தல்
23. தெய்வங்களை மகிழ்வித்தல்
24. தேரோட்டல்
25. மட்கலம் செய்தல்
26. மரக்கலம் செய்தல்
27. பொற்கலம் செய்தல்
28. வெள்ளிக்கலம் செய்தல்
29. ஓவியம் வரைதல்
30. நிலச்சமன் செய்தல்
31. காலக் கருவி செய்தல்
32. ஆடைக்கு நிறமூட்டல்
33. எந்திரம் இயற்றல்
34. தோணி கட்டல்
35. நூல் நூற்றல்
36. ஆடை நெய்தல்
37. சாணை பிடித்தல்
38. பொன்னின் மாற்று அறிதல்
39. செயற்கை பொன் செய்தல்
40. பொன்னாபரணம் செய்தல்
41. பொன் முலாமிடுதல்
42. தோல் பதனிடுதல்
43. மிருகத் தோல் உரித்தல்
44. பால் கறந்து நெய்யுருக்கல்
45. தையல்
46. நீச்சல்
47. இல்லத் தூய்மையுறுத்தல்
48. துவைத்தல்
49. மயிர் களைதல்
50. எள்ளில் இறைச்சியில் நெய்யெடுத்தல்
51. உழுதல்
52. மரம் ஏறுதல்
53. பணிவிடை செய்தல்
54. மூங்கில் முடைதல்
55. பாத்திரம் வார்த்தல்
56. நீர் கொணர்தல் நீர் தெளித்தல்
57. இரும்பாயுதம் செய்தல்
58. மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல்
59. குழந்தை வளர்ப்பு
60. தவறினைத் தண்டித்தல்
61. பிறமொழி எழுத்தறிவு பெறுதல்
62. வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல்
63. மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு
64. வெளிப்படுத்தும் நிதானம்

ஆடல் என்றால் என்ன? ஆடல் என்றால் நடனம் என பொருள். இந்த கலை இயல்பான வெளிப்பாடுகளில் ஒன்றாகும். ஆடலை கூத்து என்றும் கூறுவார்கள். பரதநாட்டியம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைகள் ஆடல் கலை என அழைக்கப்படுகின்றன.

இசைக் கருவி மீட்டல்- ஏதேனும் ஒரு இசைக் கருவியை மீட்ட தெரிந்திருக்க வேண்டும். வீணை, புல்லாங்குழல், மேளம், கடம், நாதசுரம் உள்ளிட்ட கருவிகளில் ஏதேனும் ஒரு கருவியை இசைக்கத் தெரிந்திருக்க வேண்டும். இந்த இசைக் கருவிகளை மீட்பதால் பிறரின் கண்ணீரை துடைக்கவும் கவலையை மறக்க வைக்கவும், பிறர் களைப்பை மறக்கவும் பயன்படுகிறது.

ஒப்பனை என்றால் அழகு செய்தல் என்பதாகும். நாடகம், திருவிழா உள்ளிட்ட சமயங்களில் தன்னை அழகுப்படுத்திக் கொள்ள தெரிந்திருக்க வேண்டும். எல்லா விஷயங்களுக்கும் பிறரை சார்ந்திருக்காமல் நாமே நம்மை தயார் செய்து கொள்ளுதல் ஆகும்.

சிற்பம் வடித்தல்- சிற்பத்தை வடிப்பது என்பது புண்ணிய காரியமாகும். இதற்கு பொறுமையும் நிதானமும் கலை நயமும் அவசியம். சுவாமி சிலைகள், மன்னர்களின் சிலைகளை வடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இதன் மூலம் நாம் பொறுமையை கற்று கொள்ளலாம். வெறும் கல்லாக இருந்தால் அது பயன் கிடையாது, அதை சிலையாக செதுக்கினால் 4 பேர் வணங்குவர், இந்த தத்துவத்தை நமக்கு விளக்குகிறது.

பூத்தொடுத்தல்- பூவை தொடுப்பது ஆகும். பூவை கட்டத் தெரிதல். கடவுளுக்கு பூக்களை தொடுக்க தெரிந்திருக்க வேண்டும். பூத்தொடுக்க தெரிந்தால் வீட்டில் பூக்கும் பூக்களை பறித்து அழகாக மாலையாக கட்டி தெய்வத்திற்கு சாத்த வேண்டும்.

சூதாடல்- சூதாட்டம் என்பதாகும். மகாபாரத போரில் பாண்டவர்கள் சகுனியிடம் சூதாட்டத்தில் தோற்றதால் நாட்டை இழந்து வீட்டை இழந்து இறுதியில் பஞ்ச பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலியின் மானத்தை இழக்க நேரிட்டது. எனவே எதையும் யாரிடமும் இழக்காத அளவுக்கு சூதாட தெரிந்திருத்தல்.

சுரதம் அறிதல்- பெண்ணுடன் உறவு கொள்ளும் கலை அறிதல்.

தேனும் கள்ளும் சேகரித்தல்- தேனையும் கள்ளையும் மரத்திலிருந்து சேகரிக்க தெரிந்து கொள்ள வேண்டும். தேன் கூட்டில் தேனியை சமாளித்து தேனை எடுக்க வேண்டும். அது போல் பனை மரத்தின் உச்சிக்கு சென்று கள்ளை எடுக்க தெரிந்திருக்க வேண்டும்.

நரம்பு மருத்துவம்- நரம்புகளில் ஏற்படும் வலியை குணப்படுத்தும் அளவுக்கு நீவி விடுதல், மசாஜ் செய்து விடுதல், சமையல் பொருட்களை வைத்து நரம்பு வலியை குணப்படுத்தல் உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சமைத்தல் - சமையல் என்பது அருமையான கலையாகும். பிறர் பசியை ஆற்றுவது புண்ணியகாரியமாகும். பிறரை எதிர்பாராமல் சமைக்க தெரிந்தால் நாமே நம் பசியை ஆற்றிக் கொள்ளலாம். அதிலும் ருசியான உணவை சமைத்து பிறருக்கு பரிமாறி அவர்கள் உண்ணும் அழகை பார்ப்பதே தனி சுகம்தான்.

கனி உற்பத்தி செய்தல்- பழங்களை உற்பத்தி செய்ய கற்றுக் கொண்டிருக்க வேண்டும். எந்த மண்ணில் எந்த பழங்கள் விளையும், எந்த சீதோஷ்ண சூழலுக்கு எந்த கனிகளை விளைவித்தால் லாபம் ஈட்டலாம், என்ன பழங்களுக்கு எப்படி தண்ணீர் ஊற்றுவது உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கல்லும் பொன்னும் பிளத்தல்- கல்லை பிளக்க தெரியவேண்டும். அப்போதுதான் நம் உடல் வலிமையாக இருக்கிறது என தெரிந்து கொள்ள முடியும். அதே போல் பொன்னையும் பிளக்க தெரிய வேண்டும். அப்போதுதான் விலை மதிப்புள்ள பொருளை எப்படி பக்குவமாக பிரிப்பது என்பது தெரியும்.

கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்- கரும்பு சாறிலிருந்து வெல்லத்தை எப்படி பிரிப்பது என தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதனால் மூலம் கைவசம் ஒரு தொழிலை கற்று கொள்வது போன்றதாகும்.

உலோகங்களில் மூலிகை கலத்தல்- ஒன்றுக்கு மேற்பட்ட உலோகங்களை பிரித்தல், உலோகங்களின் தரம் அறிந்து வைத்திருத்தல் ஆகும்.

கலவை உலோகம் பிரித்தல்- ஒரு கலவையிலிருந்து ஒரு உலோகத்தை பிரித்தெடுக்கும் முறையாகும்.

உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்- கலவையாக உள்ள உலோகத்தில் ஒன்றை மட்டும் எப்படி பிரிப்பது என்பதை ஆராய்ந்து அறிந்து வைத்திருக்க வேண்டும்.

உப்பு உண்டாக்குதல்- கடல் நீரில் இருந்து உப்பை பிரித்து உப்பளம் மூலம் உற்பத்தி செய்யும் பணியை கற்றிருக்க வேண்டும்.

வாள் எறிதல்- பகைவர்கள் அச்சுறுத்தல் இருக்கும் போது வாளை எறியும் கலையை கற்று அவர்களை விரட்டியடித்து தைரியமானவராக இருக்க வேண்டும். எந்த ஆபத்திலிருந்து யாரையும் காப்பாற்றும் திறமைசாலியாக இருத்தல் வேண்டும்.

மற்போர் புரிதல்- எதிரை எதிர்த்து எந்த ஆயுதமும் இன்றி சண்டையிடுதல்.

அம்பு தொடுத்தல்- குறி பார்த்து அம்பு எய்துதல். இது எதிரிக்கும் நம்மை விரட்டும் காட்டு விலங்குகளிடமிருந்து காத்து கொள்ளவும் உதவும்.

படை அணிவகுத்தல்- சண்டைக்கு ஏற்ப வியூகம் வகுத்து முப்படைகளையும் அணிவகுத்து நிற்க வைப்பதே ஆகும்.

முப்படைகளை முறைப்படுத்தல்- ராணுவம், கப்பற்படை, விமான படை ஆகிய படைகளை முறைப்படுத்துதலாகும்.

தெய்வங்களை மகிழ்வித்தல்- குலத்தெய்வங்களையும் கிராம தேவதைகளையும் எல்லைச் சாமிகளை வணங்கி மகிழ்விக்க வேண்டும்.

தேரோட்டல்- தேரை எப்படி இயக்குவது என தெரிந்திருக்க வேண்டும். மகாபாரத போரில் சாரதியாக வந்த கிருஷ்ணன் கர்ணனுக்கு பல வித்தைகளை சொல்லி கொடுத்தது போல் தேரோட்ட தெரிந்திருக்க வேண்டும்.

மட்கலம் செய்தல்- உடலை குளிர்ச்சிப்படுத்தும், உடல் நலனுக்கு கேடு விளைவிக்காத மண்பாண்டங்களை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

மரக்கலம் செய்தல்- மரங்களிலிருந்து செய்யப்படும் பொருட்களையும் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

பொற்கலம் செய்தல்- பொன் நகைகளையும் செய்ய வேண்டும். ஒரு தங்க கட்டியை கொடுத்தால் அதை உருக்கி அதிலிருந்து எப்படி அழகான நகைகளை செய்ய வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

வெள்ளிக்கலம் செய்தல்- வெள்ளி நகைகளையும் செய்ய தெரிந்திருக்க வேண்டும். வெள்ளியில் காதணி, கொலுசு , அரைஞான்கயிறு உள்ளிட்ட பொருட்களை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

ஓவியம் வரைதல்- ஓவியம் வரைய வேண்டும். ஓவியம் எனப்படுவது சிறந்த கலையாகும். மனதில் இருக்கும் கற்பனைகளை கலையாக கொட்டுவது ஆகும்.

நிலச்சமன் செய்தல்- நிலங்களை சமம் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

காலக் கருவி செய்தல்- படைக் கலன்கள் செய்வது.

ஆடைக்கு நிறமூட்டல்- ஆடைகளுக்கு பல வண்ண நிறங்களை போட்டு அழகுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அதாவது துணிகளுக்கு சாயம் போடுவது ஆகும்.

எந்திரம் இயற்றல்- எந்திரங்களை இயக்க தெரிந்திருக்க வேண்டும். எந்த சூழல் வந்தாலும் அதை எதிர்கொள்ள இயந்திரங்களின் பயன்பாடு அவசியம் என்பதால் இதை தெரிந்திருக்க வேண்டும்.

தோணி கட்டல்- படகுகள் வடிவமைத்தல்

நூல் நூற்றல்- தறி மூலம் நூல்களை நூர்க்க தெரிந்திருக்க வேண்டும். இந்த நூல்கள்தான் துணியை உருவாக்க உதவும்.

ஆடை நெய்தல்- நூல் நூற்பதோடு நிற்காமல் ஆடையை நெய்யவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

சாணை பிடித்தல்- கூர்மையில்லாத ஆயுதங்களை கூர்மைப்படுத்துதலே சாணை பிடித்தலே ஆகும்.

பொன்னின் மாற்று அறிதல்- நகை முலாம் செய்வது. அதாவது செயற்கைப் பொன் செய்யும் தொழில்.

செயற்கை பொன் செய்தல்- அசல் பொன் நகை அல்லாமல் செயற்கையான உலோகங்களை கொண்டு நகை செய்ய வேண்டும்.

பொன்னாபரணம் செய்தல்- பொன் ஆபரணம் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

பொன் முலாமிடுதல்- பொன் முலாம் பூச தெரிந்திருக்க வேண்டும். சிறிது அழுக்காக உள்ள நகைகளில் அழுக்கை நீக்கி அதன் மேல் பொன் முலாம் பூச வேண்டும்.

தோல் பதனிடுதல்- தோலை பதனிடுதல் எப்படி என தெரிந்திருக்க வேண்டும்.

மிருகத் தோல் உரித்தல்- மிருகத் தோலை உரிக்க கற்று கொண்டிருக்க வேண்டும்.

பால் கறந்து நெய்யுருக்கல்- பசுமாட்டிலிருந்து பாலை கறந்து அதை காய்ச்சி, அதிலிருந்து நெய்யை எடுக்கவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

தையல்- நமக்குத் தேவையான துணிகளை தைக்க கற்று கொள்ள வேண்டும். சட்டை, பாவாடை, ரவிக்கை, புடவை, அரைக்கை சட்டை, முழுக்கை சட்டை, அரைக்கால் பேன்ட், முழுக்கால் பேன்ட் ஆகியவற்றை தைக்க வேண்டும்.

நீச்சல் - உடல் நலனை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், சுருசுருப்பாக இயங்க வைக்கவும் நீச்சல் தெரிந்து வைத்திருப்பது அவசியம் ஆகும். அத்தோடு ஆபத்தில் உள்ளவர்களை காப்பாற்றவும் இந்த நீச்சல் உதவும்.

இல்லத் தூய்மையுறுத்தல்- நாம் வசிக்கும் இல்லத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

துவைத்தல்- துணிகளை சுத்தமாக துவைக்க வேண்டும். கந்தலானாலும் கசக்கி கட்டு என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

மயிர் களைதல்- முடியை நன்றாக திருத்த கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

எள்ளில் இறைச்சியில் நெய்யெடுத்தல்- எள், இறைச்சியில் இருந்து நெய்யை எடுப்பது.

உழுதல்- ஏர் உழுதல், விவசாயம் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.

மரம் ஏறுதல்- மரம் ஏறுவது

பணிவிடை செய்தல்- நல்லப்படியாக அனைவருக்கும் பணிவிடை செய்ய வேண்டும்.

மூங்கில் முடைதல்- மூங்கிலை வைத்து கூடை முடைதல், பூக்களை பறிக்க பயன்படுத்தப்படும் கூடையை முடைதல் ஆகியவற்றை தெரிந்திருக்க வேண்டும்.

பாத்திரம் வார்த்தல்- பாத்திரங்களை வார்க்கவும் அதாவது உலோகங்களை வைத்து பாத்திரங்களை தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

நீர் கொணர்தல் நீர் தெளித்தல்- பெண்களாக இருந்தால் தண்ணீர் எடுத்து வருவது, வீடு வாசல் தெளிப்பது போன்றவற்றைத் தெரிந்திருக்க வேண்டும்.

இரும்பாயுதம் செய்தல்- இரும்பால் ஆன ஆயுதங்கள் செய்ய வேண்டும்.

மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல்- யானை போன்ற வாகனங்களுக்கு அம்பாரி அமைப்பது.

குழந்தை வளர்ப்பு- குழந்தை வளர்ப்பு என்பதும் ஒரு பெரிய கலைதான். இதில் பெண் மட்டுமல்ல ஆணும் கற்று தேர்ச்சி பெற வேண்டும்.

தவறினைத் தண்டித்தல்- யாராவது தவறு செய்தால் அதை தட்டிக் கேட்க வேண்டும். அதற்கான தண்டனையையும் கொடுக்க வேண்டும்.

பிறமொழி எழுத்தறிவு பெறுதல்- தாய்மொழியில் மட்டுமல்லாமல் பிறமொழிகளிலும் எழுதவும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல்- வெற்றிலை பாக்கு எப்படிப் போடுவது என்ற பக்குவம் அறிவது.

மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு- மேலே கூறிய 62 கலைகளையும் வேகமாக உள்வாங்கி கற்று தேர்ந்திருக்க வேண்டும்.

வெளிப்படுத்தும் நிதானம்- மேற்கண்ட 62 கலைகளையும் கற்று கொண்டு அதை வெளிப்படுத்துவதில் நிதானம் இருக்க வேண்டும்.

இனி தெரிந்து கொள்ளுங்கள், இதுதான் 64 ஆயக்கலைகளாகும்.

English summary
What is Aayakalaigal 64 ? What are they? Do you know the benefits of them?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X