நெடுவாசல் கொந்தளிப்புக்கு மத்தியில்.. நாகை நெல் வயல்களில் கச்சா எண்ணெய் குழாய்கள் பதிப்பிக்கும் பணி!
நாகை மாவட்டத்தில் உள்ள நெல்வயல்களில் கச்சா எண்ணெய் குழாய்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
நாகை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள வயல்களுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்கள் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாகை, திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடியில் பெட்ரோலிய பொருட்கள் இருப்பதாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 1985-ஆம் ஆண்டு திருவாரூர் அருகே ஆமூர், திருத்துறைப்பூண்டி அருகே களப்பால், நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இலுப்பூர் போன்ற பகுதியில் எண்ணெய் கிணறுகள் அமைக்க தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதைத் தொடர்ந்து நாகை மாவட்டத்தில் கீழ்வேளூரை அடுத்த ஓர்குடி, கடம்பங்குடி மற்றும் சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம் போன்ற பகுதியில் எண்ணைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேப் போல் திருவாரூர் மாவட்டத்தில் அடியக்கமங்கலம், கருப்பூர், விளமல் போன்ற பல்வேறு பகுதியில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
காவிரி டெல்டாவில் எண்ணெய் கிணறு அமைக்கும் பணிக்கு காவிரி படுகை திட்டம் என்று பெயரிட்டுதொடங்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதி பெரும்பாலான பகுதி விளை நிலம் என்பதால் எண்ணெய் கிணறு அமைக்க தொடக்கத்தில் 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கையகப்படுத்தப்பட்ட விளை நிலத்தில் மண் கொண்டு நிரப்பி அந்த இடத்தில் எண்ணெய் கிணறு அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. ஒரு இடத்தில் எண்ணெய் கிணறு அமைக்க சுமார் 2,500 மீட்டர் முதல் 4,000 மீட்டர் ஆழம் வரை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.
பூமிக்கு அடியில் உள்ள பெட்ரோலியப் பொருட்கள் , எரிவாயு இரண்டும் தானாகவே வெளியே வரும், சில இடங்களில் பம்பிங் செய்து எடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் எண்ணெய் கிணறு அருகிலேயே தொட்டி அமைத்து கச்சா எண்ணெய் சேமிக்கப்பட்டு லாரிகள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படும்.
தற்போது நாகை மாவட்டம், நாகூரை அடுத்த நரிமணம் பனங்குடியில் சி.பி.சி.எல். நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதால் கீழ்வேளூர் பகுதியில் ஓர்குடியில் கத்திரிபடுகை, ஓர்குடி மெயின்ரோடு, மஞ்சவாடி, அகரவேலி, பூலாங்குடி ஆகிய இடங்களில் தலா இரண்டு எண்ணெய் கிணறுகளும், பிள்ளைத்திடல், மூத்திதிடலில் தலா ஒரு எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த எண்ணை கிணறுகளில் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய், குழாய் மூலம் கடம்பங்குடியில் சேமிக்கப்பட்டு அங்கிருந்து குழய் மூலம் பனங்குடி சி.பி.சி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அதேப் போல் திருவாரூர் மாவட்டம், அடியக்க மங்கலம், கருப்பூர், விளமல் போன்ற பகுதியில் கிடைக்கும் கச்சா எண்ணெய்களை குழாய் மூலம் பனங்குடி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் இருந்த பனங்குடி சி.பி.சி.எல். எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்திற்கு கீழ்வேளூர் பகுதியான வடக்குவெளி கிராமம் வழியாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் குழாய் சுமார் 5 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டது.இந்த குழாய் சேதம் ஏற்பட்டு கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறி விளை நிலங்களில் பரவியதால் நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பழைய குழாய்களுக்கு பதில் புதிய குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்குவதாக அறிவித்த நிலையில் இந்த திட்டத்துக்கு காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தற்போது பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய்களை புதுப்பிக்கும் பணி விளை நிலங்களில் நடைபெற்று வருவது அப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது.