லாக்டவுன் காலத்தில் விவசாயிகளுக்கு ரூ 17,986 கோடி உதவித் தொகை.. மத்திய அமைச்சர் தோமர்
டெல்லி: லாக்டவுன் காலத்தில் காய்கறி பற்றாக்குறை என்கிற நிலைமையே உருவாகவில்லை; விவசாயிகளுக்கு ரூ 17,986 கோடி வழங்கபட்டுள்ளது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர தோமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் நரேந்தர தோமர் கூறியதாவது:
மத்திய அரசு வேளாண்துறைக்கு மத்திய அரசு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் வேளாண் பொருளாதாரமும் மிகவும் முக்கியமான ஒன்றுதான்.
தற்போதைய சூழ்நிலையில் எங்கேயும் காய்கறிகள் பற்றாக்குறை என்கிற நிலைமை உருவாகவே இல்லை. இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் கூட விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ17,986 கோடி வழங்கி உள்ளது.
பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் மார்ச் 24-ந் தேதி முதல் இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் 4 மாதங்களுக்கு ஒரு முறை 3 தவணையாக ரூ2,000 வழங்கப்பட்டு வருகிறது.
லாக்டவுன் காலத்தில் விவசாயிகளுக்கு உதவ கிஷான் ரத் என்ற ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 17-ந் தேதி முதல் செயல்பட்டு வரும் இந்த ஆப் மூலம் விளைபொருட்களை எங்கே எப்படி கொண்டு சேர்ப்பது என்பது குறித்து வழிகாட்டுதல்களை வழங்கும்.
இவ்வாறு நரேந்தரசிங் தோமர் கூறினார்.
நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கூறுகையில், வேளாண்துறையின் வளர்ச்சி 3% ஆக உள்ளது. தற்போதைய நெருக்கடியாக காலத்திலும் வேளாண் பொருளாதாரம் இந்த நிலைமையை எட்டியிருக்கிறது.
நாட்டின் 50% பொருளாதாரம் இயங்காமல் முடங்கி இருக்கிறது. ஆனால் வேளாண்துறை அப்படியானது அல்ல. இந்திய பொருளாதாரத்தில் வேளாண்துறை மட்டுமே 0.5% பங்களிப்பு செலுத்துகிறது. தற்போதைய காலத்தில் வேளாண்துறையின் பங்களிப்பு கூடுதலாக இருக்கும்.
கடந்த காலங்களை ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் உரங்கள் விற்பனை 8% அதிகரித்துள்ளது. லாக்டவுன் காலத்திலும் பால் பொருட்களும் வேளாண் பொருட்களும் அனைத்து தரப்புக்கும் சென்றடைந்துள்ளது. இவ்வாறு ரமேஷ் சந்த் கூறினார்.