பாரதி பக்கம்
7. மாயையைப் பழித்தல்
ராகம்: காம்போதி
தாளம்: ஆதி
- உண்மை அறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே - மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ! - மாயையே! (1)
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ? - மாயையே! (2)
என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே! - நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் - மாயையே! (3)
சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே! - இந்தத்
தேகம் பொய் யென்றுணர் தீரரை யென்
செய்வாய்! - மாயையே! (4)
இருமை யழிந்தபின் எங்கிருப்பாய், அற்ப
மாயையே!- தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ! - மாயையே! (5)
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே - சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை - மாயையே! (6)
என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையே! - இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண் - மாயையே! (7)
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே! - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை - மாயையே! (8)