பாரதி பக்கம்
13. நான்
- இரட்டைக் குறள் வெண் செந்துறை
வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான் ;
மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான் ;
கானிழல் வளரும் மரமெல்லாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான். (1)
விண்ணில் தெரிகின்ற மீனெல்லாம் நான்
வெட்ட வெளியிந்ன் விரவெலாம் நான்.
மண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான்,
வாரியிலுள்லள் உயிரெல்லாம் நான். (2)
கம்பனிசைத்த கவியெல்லாம் நான்,
காருகர் தீட்டும் உருவெல்லாம் நான் ;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான். (3)
இன்னிசை மாத ரிடையுளேன் நான் ;
இன்பத் திரள்கள் அனைத்துமே நான் ;
புன்னிலை மாந்தர் தம் பொய்யெல்லாம் நான் ;
பொறையருந் துன்பப் புணர்ப்பெல்லாம் நான். (4)
மந்திரங் கோடி இயக்குவோன் நாந்,
இலங்கு பொருளின் இயல்பெலாம் நான்,
தந்திரங் கோடி சமைத்துள்ளோன் நான் ,
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். (5)
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான் ;
கண்டதற் சக்திக் கணமெலாம் நான்,
காரண மாகிக் கதித்துளோன் நான். (6)
நானெனும் பொய்யை நடத்துவோன் நான் ;
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதிநான்! (7)












Click it and Unblock the Notifications