கமல்ஹாசனுக்கு ஒரு வேண்டுகோள்!
தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று டாக்டர் இராமதாசு அவர்களும் திருமாவளவனும் கூறுவதுமெத்தப் படித்த சில மேதாவிகளின் உள்ளத்தில் எரிச்சலை ஊட்டியிருப்பதோடு அவ்வாறு கூறும் அவர்களைப் பார்த்துக் கேலியும்கிண்டலும் செய்கின்ற நிலை தொடருகின்றது.
யார் கூறுகிறார்கள் என்பதை விட்டுவிட்டு, என்ன கூறுகிறார்கள் என்பதை மட்டும் சற்றுக் கூர்ந்து கவனித்தால் அதில் புதைந்துள்ள உண்மைநிலை புரிய வரும். டாக்டர் இராமதாசு மற்றும் திருமாவளவனுக்கு ஆதரவாக நான் எழுதுவதாக நினைக்காமல் உண்மையிலேயேதமிழ்மொழி மீது பற்றுள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உலகின் தொன்மையான அருமையான இனிமையான செம்மொழியான நம் தமிழ்மொழி திரைப்படங்களில் படும்பாட்டைக் கொஞ்சம்நினைத்துப் பாருங்கள். மொழியே தெரியாத வடநாட்டவர்களின் வாயில் இருந்து பாடல்களாகப் புறப்பட்டு வரும் தமிழ்ச் சொற்களின்நிலையை நினைத்தால் இரத்தக்கண்ணீரே வருகின்றது.
அண்மையில், சென்னை சென்று இருந்தபோது, சிற்றலையில் ஒலிப்பரப்படும் சில தனியார் வானொலிகளின் தமிழ் ஒலிபரப்பைக்கேட்டுவிட்டு அய்யோ நம் செந்தமிழுக்கா இந்தக் கதி என்று உள்ளம் துடித்தது. ஒரு பெண் அறிவிப்பாளர் தமிழ்மொழியைக் கடித்துத்துப்பிக்கொண்டிருந்தார். வேறு ஒரு நாடாக இருந்தால் மொழியைத் கடித்துத் துப்பும் அவரின் முகத்தில் காறி எச்சிலை உமிழ்ந்துஇருப்பார்கள். ஆனால் தமிழன் அதை இரசித்துக் கேட்டு மகிழ்கின்றான்.
இப்படி மக்களிடம் விரைந்து செல்லும் தகவல் ஊடகங்ளின் வாயிலாக தமிழ்மொழி சிதைக்கப்படுகின்றது, உருக்குலைக்கப்படுகின்றது. இதுகண்டிப்பாக நம்மொழிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குள்ளநரி வேலையாகும். இதுதான் இன்றைய உண்மையான நிலையாகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த இலக்கிய இலக்கணத்தை தன்னகத்தே கொண்ட உயர் தனிச்செம்மொழியானதமிழ்மொழியின் அருமை பெருமையைத் திட்டமிட்டு அழிக்க, சிதைக்க ஒரு கூட்டம் முற்படுகின்றது. அதை யார் தட்டிக் கேட்பது? யார்பூனைக்கு மணி கட்டுவது? திரு.இராமதாசு மற்றும் திரு.திருமாவளவன் இந்தப்பணியில் இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது. அவர்களின்இச்செயலுக்கு உள்நோக்கம் இருப்பதாகப் பலர் சந்தேகித்து விமர்சிக்கின்றனர்.
உள்நோக்கம் எதுவாக இருந்தால் நமக்கு என்ன? நம் தமிழ்மொழி பாதுகாக்கப்படுகின்றதா இல்லையா? எப்போதும் எந்தச் செயலையும்குற்றம், குறை கூறி விமர்சிக்கும் ஒரு கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கும். இப்போது டாக்டர் இராமதாசு அவர்களையும்திருமாவளவனையும் குறை கூறுகின்றது. இதை ஏன் அவர்களின் மிரட்டலாக எடுத்துக் கொண்டு விமர்சிக்க வேண்டும். தமிழ் ஆர்வலர்கள்விடுக்கும் வேண்டுகோளாக ஏன் திரைப்படத்துறையினர் எடுத்துக்கொள்ளக் கூடாது?
தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால்தான் என்ன? உங்கள் குடியா மூழ்கிவிடும். தமிழில் பெயர் வைத்தால் படம் ஓடாதாஎன்ன? ஆங்கிலத்தில் பெயர் வைத்தால்தான் படம் ஓடுமா? நீங்கள் என்ன ஆங்கிலப்படமா எடுக்கிறீர்கள்?
சினிமா இயக்குனர் சூரியா போன்றவர்களுக்குப் பணம்தான் முக்கியம். இவரைப் போன்ற வக்கிரப்புத்தி கொண்ட சினிமா இயக்குனர்கள்பலர் பாலுறவுக் காட்சிகளைச் சித்தரிக்கும் கதைகளை மையமாக வைத்து திரைப்படங்கள் எடுத்து, பணம் பண்ணத் துடிக்கும் மலிவான"மஞ்சள்" வியாபாரிகளாக விளங்குகிறார்கள்.
ஒரு திரைப்படத்தின் பெயரைப் பாருங்கள் பி.எப். மற்றொரு திரைப்படத்தின் பெயர் ராஸ்கல். வேறு பெயர்களே இவர்களுக்குக்கிடைக்கவில்லையா? மட்டமான மலிவான மஞ்சள் திரைப்படங்கள் இளைஞர்களின் உள்ளத்தைக் குலைத்து, தீயவழிகளில் அழைத்துச்செல்லும் வல்லமை படைத்தது.
உலகத்திலேயே சினிமா நடிகர்கள் மீது தீவிரமான பற்றுக்கொண்டு அவர்களைத் தங்களின் கடவுளாக நினைக்கும் மடையர்கள் யார் என்றுபார்த்தால் தமிழர்களுக்குத்தான் அந்தப் பெருமையும் புகழும் போய்ச்சேரும். அந்தளவுக்குக் கலையையும் கலைஞர்களையும் நேசிக்கும்மக்கள் நம் மக்கள்.
குஷ்பு மற்றும் விஜயகாந்த் போன்ற நடிகை நடிகர்களுக்குக் கோயில் கட்டியவன் தமிழன். நடிகர் விஜய் நடித்த ஒரு புதியபடத்தைமுதல்நாளே பார்க்க முடியவில்லையே என்று தற்கொலையே செய்துகொள்கின்றான் ஒரு இளைஞன். இப்படிப் பயங்கரமான தாக்கத்தைஉருவாக்கும் ஒரு சக்தியாக, ஏன் தமிழகத்தின் ஆட்சி மாற்றத்துக்கே காரணமாக விளங்கும் ஒரு சக்தியாக, தமிழனின் அன்றாட வாழ்வில்தவிர்க்க முடியாத ஒரு வலிமையான சக்தியாகத் திரைப்படத்துறை உருவாகியுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ஒரு காலத்தில் திரைப்படங்கள் வழியாகவே தமிழை வளர்த்த நிலையும் உண்டு. இன்று தமிழ்மொழியின் சிதைவுக்குக் காரணமாக விளங்கிவருகின்றது. இப்படிச் சினிமா ஒரு முக்கிய தகவல் ஊடகமாக விளங்கும்போது அதில் தமிழ் ஆர்வலர்கள் கவனம் செலுத்துவதுமுக்கியமான தவிர்க்க முடியாத ஒன்றுதான்.
உடனடி தேவையும் கூட. சினிமா மட்டும் இல்லாமல் வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ்கள் போன்ற அனைத்துத் தகவல் ஊடகங்களும்தற்போது தமிழ்மொழி சிதைவுக்குக காரணமாக விளங்குகின்றன.
நடிகர் கமலஹாசன், தமிழ்மொழிப்பற்று உடையவர் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. முன்பு சண்டியர் விவகாரத்தில்பாதிக்கப்பட்டதால் அவருக்கு தற்போது சினம் வருவது இயல்புதான். ஆனால், தமிழுக்காக இந்த முறை அவர் தன் திரைப்படத்தின் பெயரைமாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்.
முன்பு மூன்றாந்தர அரசியல்வாதிகளுக்காகத் தன் படத்தின் பெயரை மாற்றிய நீங்கள் தற்சமயம் நம் தாய்தமிழுக்காகப் பெயரை மாற்றிவைத்தால் அதில் ஒன்றும் தப்பு இல்லை. டாக்டர் இராமதாசு மற்றும் திருமாவளவன் என்று பார்க்காமல், நம் மொழிக்காக நீங்கள் இதைச்செய்தல் வேண்டும். உங்களைப் பார்த்து மற்றவர்களும் அவ்வாறே செய்வார்களேயானால், அது நம் தமிழுக்குக் கிடைத்த வெற்றியாகவேஇருக்கும்.
தமிழ்மொழி மீது உண்மையிலேயே பற்று வைத்திருக்கும் திரு. கமல் அவர்கள் இந்த வேண்டுகோளைப் பரிசீலிக்க வேண்டும். மேலும்திரைப்படத்துறையினர் வியாபார நோக்கத்திலேயே இருக்காமல் சற்றுச் சமுதாயப் பொறுப்பையும் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும். கலை, கலைக்காக மட்டுமல்ல! கலை சமுதாய சேவைக்கும் என்ற நிலையை நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
- அக்னிப்புத்திரன் ([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1. வேகமா? விவேகமா?
2. எட்டாத பழத்துக்குக் கொட்டாவி!
3. ஞானி!
4. டுபாக்கூர் விருதா? தேவையற்ற ஒரு சர்ச்சை!
5. கனிந்து வரும் காலம்
6. நாடகம் நடக்குது நாட்டிலே!
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.